நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் வீட்டில் சொத்து ஆவணங்கள் பறிமுதல்; லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் நடவடிக்கை


நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் வீட்டில் சொத்து ஆவணங்கள் பறிமுதல்; லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 3 July 2021 2:06 PM GMT (Updated: 3 July 2021 2:06 PM GMT)

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் பேரில் அணைக்கட்டு நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் 10 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூர்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் பேரில் அணைக்கட்டு நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் 10 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மாநில நெடுஞ்சாலை கோட்டத்துக்கு உட்பட்ட அணைக்கட்டு பகுதியில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ரஞ்சித்குமார். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதைத்தொடர்ந்து போலீசார் ரஞ்சித்குமாரின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். மேலும் தொடர் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் வேலூரை அடுத்த ஊசூர் அருகே உள்ள ஜி.ஆர்.பாளையம் நேதாஜிநகரில் உள்ள ரஞ்சித்குமாரின் வீட்டில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். 

சொத்து ஆவணங்கள் பறிமுதல்

அப்போது வீட்டில் இருந்த 35 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கம், 10 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக ரஞ்சித்குமார் மற்றும் அவரின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களிடம் நகை, பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. 

சொத்து ஆவணங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக ரஞ்சித்குமாரிடம் ஓரிருநாளில் நேரில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

அவரின் வருமானம் மற்றும் குடும்பத்தினர் வருமானம் மற்றும் அனைத்து வரவு, செலவுகளும் கணக்கெடுக்கப்படும். அதன் அடிப்படையில் நகை, பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் அனைத்தையும் ஆராய்ந்தால், அவர் வருமானத்துக்கு அதிகமாக எவ்வளவு சொத்து சேர்த்துள்ளார் என்று தெரிய வரும். 

அதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Next Story