அமராவதி பகுதியில் இடைத்தரகர்கள் ஆதிக்கத்தால் நெல் சாகுபடியில் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர்


அமராவதி பகுதியில் இடைத்தரகர்கள் ஆதிக்கத்தால் நெல் சாகுபடியில் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர்
x
தினத்தந்தி 3 July 2021 4:19 PM GMT (Updated: 3 July 2021 4:19 PM GMT)

அமராவதி பகுதியில் இடைத்தரகர்கள் ஆதிக்கத்தால் நெல் சாகுபடியில் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர்

தளி,
அமராவதி பகுதியில் இடைத்தரகர்கள் ஆதிக்கத்தால் நெல் சாகுபடியில் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நெல் சாகுபடி
அமராவதி அணை பாசனத்தில் நெல் சாகுபடியே பிரதானமாகும். அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்து மற்றும் நீர் இருப்பை பொறுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பருவமழை கை கொடுத்து உதவினால் மட்டுமே 2 போகம் நெல் சாகுபடி மேற்கொள்ளலாம். அதுமட்டுமின்றி அமராவதி ஆறு மூலமாக கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளுக்கு ஏற்படுகின்ற நிலத்தடி நீர் இருப்பைக் கொண்டு தென்னை, வாழை, காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.
அமராவதி அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஆண்டு அணையில் நீர்இருப்பு இருந்ததால் 2 போகம் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் நெற்பயிர்களும் நல்ல முறையில் வளர்ந்து அறுவடையை எட்டியது. ஆனால் வழக்கம்போல் இடைத்தரகர்கள் ஆதிக்கம் விளைச்சல் குறைவால் விவசாயிகள் நஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
அறுவடை பணி
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தரமான விளைபொருட்களை உற்பத்தி செய்வதை தலையாய கடமையாக கொண்டு நாள்தோறும் கடுமையாக உழைத்து வருகிறோம். நடவு செய்யும் போது இருக்கும் விலை விளைச்சல் வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு குறைந்து விடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அனைவரும் அறுவடை செய்து முடித்தபின்பு ஓரிரு மாதங்களில் மீண்டும் விலை ஏறி விடுகிறது.இதனால் உழைப்பை கொட்டி விலைமதிக்க முடியாத நேரத்தை வீணாக்கி உழவு செய்யும் விவசாயிகள்கடனாளி ஆகி விடுகிறார்கள். 
இந்த ஆண்டு அணையில் போதுமான அளவு நீர் இருப்பு இருந்ததால் 2 போகம் நெல் சாகுபடி மேற்கொண்டோம். இயற்கை இடர்பாடுகள், பூச்சி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு இடையில் அறுவடையை மேற்கொண்டோம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சலகை நெல் (120 கிலோ) ரூ.1,700-க்கு விற்பனையானது. இன்று அதே ஒரு சலகை நெல் ரூ.1,600 விற்பனை ஆகிறது. கூலி உயர்வு, இடுபொருள்கள் விலை உயர்வு, பராமரிப்பு மற்றும் அறுவடை செலவு பல மடங்குஉயர்ந்து விட்டது.
இடைத்தரகர்கள் ஆதிக்கம்
ஆனால் நெல் கொள்முதல் விலை மட்டும் 10 ஆண்டுகளுக்கு பின்பும் ஏறாமல் ரூ.100 குறைந்து உள்ளது. இந்த முறை ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்து உள்ளோம். ஆனால் ஏக்கருக்கு 26 முதல் 30 மூட்டை அளவு விளைச்சல் வந்துள்ளது. ஒரு மூட்டை ரூ.750 முதல் ரூ.800 வரை விற்பனை ஆவதால் ஏக்கருக்கு சுமார் ரூ.7 ஆயிரம் வரையிலும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. அரசு நேரடியாக நெல்லை கொள்முதல் செய்வதாக அறிவித்தது. ஆனால் இந்த முறையும் அந்த பலன் எங்களுக்கு கிடைக்கவில்லை. இதை சாதகமாக கொண்டு இடைத்தரகர்கள் நெல்லை அடிமாட்டு விலைக்கு ஒரு மாத தவணைக்கு வாங்கிச் செல்கின்றனர்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
வைக்கோல் கட்டு கட்டுபவர்கள் அதையே பின்பற்றுகின்றனர். ஏக்கருக்கு ரூ.3,500 கொடுத்து விட்டு எங்கள் கண் முன்பாகவே ஒரு கட்டு வைக்கோலை ரூ.150-க்கு விற்பனை செய்கின்றனர். விவசாயிகளின் 3 மாத மொத்த உழைப்பை இடைத்தரகர்கள் குழு அமைத்து திட்டமிட்டு ஒரு மணி நேரத்தில் சுரண்டி விடுவதால் நஷ்டம் ஏற்படுகிறது. உணவுப் பொருளை விளைவிக்கும் எங்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையையும் வழங்கப்பட வேண்டும். இதனால் விவசாய தொழிலும் நலிவடையாதுவிவசாயிகளின் வாழ்வாதாரமும் உயரும்.
எனவே இனி வரும் காலங்களில் நெல் கொள்முதலை அரசு நேரடியாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைத்தரகர்கள் வியாபாரிகள் ஆதிக்கத்தை முழுமையாக ஒழித்து நெல் உள்ளிட்ட அனைத்து விலை பொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்து விவசாயிகள் லாபம் ஈட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story