தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டம்


தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டம்
x
தினத்தந்தி 3 July 2021 5:04 PM GMT (Updated: 3 July 2021 5:04 PM GMT)

தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி செயற்குழு கூட்டம் காயல்பட்டினத்தில் நடந்தது.

ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி செயற்குழு கூட்டம் கட்சியின் காயல்பட்டினம் நகர அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மீராசா மரைக்காயர் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முகம்மது அபுபக்கர், மாநில செயலாளர் காயல் மகபூப், மாநில துணை செயலாளர் இப்ராஹிம் மக்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மஹ்மூது ஹசன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் மற்றும் கட்சி பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த தி.மு.க.வுக்கும், முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்த கூட்டம் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2 அமைச்சர்கள் தந்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் 3 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது வேதனையை அளித்தாலும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என்ற மாநில தலைமை அறிவிப்பின்படி கட்டுப்பட்டு நடப்பது. 

வரவிருக்கின்ற உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதற்கு கட்சி விரைந்து பணியாற்ற வேண்டும். உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்வது. தூத்துக்குடி, காயல்பட்டினம் பகுதிகளில் தரமான சாலைகள் அமைக்க வேண்டும். காயல்பட்டினத்தில் 2-ம் குடிநீர் திட்டத்தை தொடர்ந்து‌ விரிவாக்கம் செய்து மக்களுக்கு சீராக குடிநீர் வழங்க வேண்டும்.

காயல்பட்டினம் அரசு மருத்துவமனையை தாலுகா அளவிலான மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். அங்கு காலியாக உள்ள பணியிடங்களில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு காயல்பட்டினம் வழியாக செல்லும் நெடுஞ்சாலைகளை விரைவில் புதிய சாலைகளாக அமைக்க வேண்டும்.  திருச்செந்தூர்- நெல்லை பயணிகள் ரெயில் சேவையை விரைந்து தொடங்க வேண்டும் என்று ெரயில்வே நிர்வாகத்தை கேட்டுக்கொள்வது. ஏரல் அரசு மருத்துவமனையில் டாக்டர்களை நியமிக்க வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story