`ஹெல்மெட்' அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து ஆன்-லைனில் வசூல்


`ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து ஆன்-லைனில் வசூல்
x
தினத்தந்தி 3 July 2021 5:13 PM GMT (Updated: 3 July 2021 5:13 PM GMT)

புதுக்கோட்டையில் `ஹெல்மெட்' அணியாத வாகனஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து ஆன்-லைனில் வசூலிக்கும் நடவடிக்கை தீவிரமாகுகிறது.

புதுக்கோட்டை, ஜூலை.4-
புதுக்கோட்டையில் `ஹெல்மெட்' அணியாத வாகனஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து ஆன்-லைனில் வசூலிக்கும் நடவடிக்கை தீவிரமாகுகிறது.
போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாகன போக்குவரத்து அதிகமாகி விட்டது. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் எண்ணிக்கையும் அதிகமானது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பலர் `ஹெல்மெட்' அணியாமல் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கும் படி போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி புதுக்கோட்டையில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கீழ ராஜ வீதி, மேல ராஜ வீதி உள்பட முக்கிய கடை வீதிகள், பிரதான சாலைகளில் நின்று வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இரு சக்கர வாகனங்களில் `ஹெல்மெட்'  அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.100 அபராதம் விதித்து வருகின்றனர்.
 இந்த அபராத தொகையை நேரடியாக வசூலிக்காமல் ஆன்-லைனில் செலுத்த அறிவுறுத்தி விடுகின்றனர். `ஹெல்மெட்' அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி வரும் நபர்களின் வாகன பதிவெண்ணை குறித்து அவர்களது செல்போன் எண்ணிற்கு அபராத தொகை குறித்து குறுந்தகவல் அனுப்பி வருகின்றனர். இதில் அபராத தொகையை ஆன்-லைனில் செலுத்தி வருகின்றனர்.
அபராதம் விதிப்பு
புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் சப்-இன்ஸ்பெக்டர் மரிய சாத்தோ திலகராஜ் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனங்களில் வந்த ஏராளமானோர் `ஹெல்மெட்'  அணியாமல் வந்தனர். அவர்களது வாகன பதிவெண்ணை போலீசார் குறித்து கொண்டு அபராதம் விதிப்பது குறித்து எடுத்துக்கூறி அனுப்பினர். சிலர் எதுக்காக வாகன பதிவெண்ணை போலீசார் குறிக்கிறார்கள் என தெரியாமல் சென்றனர். அவர்களுக்கு செல்போன் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். வந்த பின்பு தான் அபராதம் விதிப்பு பற்றி தெரியும். இரவலுக்கு வாகனங்களை வாங்கி பயன்படுத்தியிருந்தால், வாகனத்தின் உரிமையாளரின் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்த பின்பு தான் தெரியும். இரு சக்கர வாகன ஓட்டிகள் முக கவசம் அணிவதோடு விபத்தை தடுக்க ஹெல்மெட்டும் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், இந்த அபராத நடவடிக்கை தொடர்ந்து தீவிரமாகும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story