கோவில்களில் கிருமி நாசினி தெளிப்பு


கோவில்களில் கிருமி நாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 3 July 2021 5:15 PM GMT (Updated: 3 July 2021 5:15 PM GMT)

கோவில்களை தூய்மைப்படுத்தி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை, ஜூலை.4-
புதுக்கோட்டை மாவட்டத்தில் 56 நாட்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் நாளை திறக்கப்படுகிறது. இதையொட்டி கோவில்களை தூய்மைப்படுத்தி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ஊரடங்கு
கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவியதால் தமிழகத்தில் கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடந்த 28-ந் தேதி முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன. இந்த நிலையில் நாளையுடன் (திங்கட்கிழமை) முடிவடைய இருந்த ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
கிருமி நாசினி தெளிப்பு
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவில்களில் நடைகளை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். புதுக்கோட்டை டவுனில் பிரசித்தி பெற்ற சாந்தநாத சாமி கோவில் முன்பு மற்றும் வளாக பகுதியில் நேற்று நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தினர்.
இதேபோல கோவில் உள்பிரகாரத்தில் தூய்மை பணியை கோவில் ஊழியர்கள் மேற்கொண்டனர். மற்ற கோவில்களிலும் முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று மதியம் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டன.
தடுப்பு நடவடிக்கைகள்
பக்தர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்கள் வரிசையை கடைப்பிடிக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர். 56 நாட்களுக்கு பிறகு நாளை கோவில்கள் திறக்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் ஆவலுடன் தரிசனம் செய்ய உள்ளனர். இதேபோல மற்ற வழிபாட்டு தலங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

Next Story