விருத்தாசலம் அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு


விருத்தாசலம் அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 3 July 2021 5:26 PM GMT (Updated: 3 July 2021 5:26 PM GMT)

விருத்தாசலம் அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு செய்தார்.


விருத்தாசலம், 

விருத்தாசலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு நேற்று திடீரென  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகை தந்தார். தொடர்ந்து பள்ளியில் உள்ள வகுப்பறைகள், விளையாட்டு மைதானம் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை அவர் ஆய்வு செய்தார்.


 பள்ளியில் சேதமடைந்த கட்டிடங்களை பார்வையிட்ட அவர், அதற்கு விரைவில் தீர்வு காண்பதாக தெரிவித்தார். தொடர்ந்து, பள்ளிக்கு தேவையான வசதிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். அப்போது ஆசிரியர்கள் பள்ளியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் இரவு காவலரை நியமிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆசிரியர்களிடம் ஆலோசனை

பின்னர் பள்ளியின் வளர்ச்சி,  மாணவர்களின் சேர்க்கை குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்து ஆலோசனை நடத்தினார். மேலும்  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்களின் எண்ணிக்கை விபரம், ஸ்மார்ட் கிளாஸ் கணினி ஆய்வகம் பற்றிய விவரங்கள், அதன் பயன்பாடு குறித்தும் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, மாவட்ட கல்வி அலுவலர் சுப்ரமணியன், ஆய்வாளர் தெய்வசிகாமணி, புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரேம்குமார் ஆகியோர் உடனிருந்தனர். 

முன்னதாக விருத்தாசலத்துக்கு வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு விருத்தாசலம் நகர தி.மு.க. செயலாளர் தண்டபாணி தலைமையில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

Next Story