30 பேருக்கு ஒரு கண்ணில் பார்வை இழப்பு


30 பேருக்கு ஒரு கண்ணில் பார்வை இழப்பு
x
தினத்தந்தி 3 July 2021 5:36 PM GMT (Updated: 3 July 2021 5:36 PM GMT)

30 பேருக்கு ஒரு கண்ணில் பார்வை இழப்பு

கோவை

கோவையில் கருப்புபூஞ்சை நோய் பாதிப்பில் 30 பேருக்கு ஒரு கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது.

கருப்பு பூஞ்சை நோய்

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்க ளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், கட்டுப்பாடற்ற சர்க்கரை, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு, எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கருப்புப் பூஞ்சை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது.


கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு இல்லாவிட்டாலும் கட்டுப் பாடற்ற சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள், சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய், எய்ட்ஸ் உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்பார்வை இழப்பு

இந்தநிலையில் கோவையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 30 பேர் நோய்த் தொற்றின் தீவிரத்தால் ஒரு கண்ணின் பார்வையை இழந்துள்ளனர்.

இது தொடர்பாக அரசு மருத்துவமனை முதல்வர் அ.நிர்மலா கூறியதாவது

அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவர்களுக்கு எண்டோஸ்கோபி செய்யப்பட்டு அழுகிய சதை திசுக்கள் எடுத்து ஆய்விற்கு அனுப்பப்படுகிறது. 

ஆய்வு முடிவின் அடிப்படையில் என்டோஸ்கோபி அறுவை சிகிச்சை, மூக்கு எலும்புகள் அறுவை சிகிச்சை, கண் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு 264 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் எண்டோஸ்கோபி செய்யப்பட்டுள்ளது. 

இதில் 110 பேருக்கு எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. தீவிர நோய்த் தொற்று பாதிப்புடன் வந்த 30 பேர் ஒரு கண் பார்வையை இழந்துள்ளனர்.  இதில் ஒரு சிலருக்கு கண் அகற்றப்பட்டுள்ளது. 

ஆரம்ப நிலையில் வந்த அனைவருக்கும் உரிய சிகிச்சை அளித்ததன் மூலம் குணமடைந்துள்ளனர். 

எனவே அலட்சியமாக இல்லாமல் மூக்கடைப்பு, மூக்கில் இருந்து சளியுடன் ரத்தம் கலந்து வருதல், கண் வீக்கம், முக வீக்கம், கண் சிவப்பாக மாறுதல், தலைவலி, பல்வலி போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

ஆரம்பநிலை

மூக்கு வழியாக செல்லும் இந்த நோய்த் தொற்று சைனஸ் வழியாக கண்ணிற்கு சென்று கண் பாதிக்கப்படுகிறது. அதே போல் கண் வழியாக மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி உயிர் இழப்பு வரை ஏற்படுகிறது. 

இதனால் நோய்த் தொற்றின் ஆரம்ப நிலையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் கண் பார்வை இழப்பு, உயிரிழப்பு போன்றவற்றை தவிர்க்க முடியும். கருப்புப் பூஞ்சை நோய் தொற்றுக் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அதே நேரம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

குறிப்பாக கட்டுப்பாடற்ற சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள், சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய், எய்ட்ஸ் உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இதனால் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். 

கூடிய வரையில் முகக்கவசம் அணிவதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மூக்கு வழியாகவே இந்நோய்த் தொற்று பரவுவதால் முகக்கவசம் அணிவதன் மூலம் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story