நுண்ணீர் பாசனம் அமைக்க ரூ.21¾ கோடி ஒதுக்கீடு கலெக்டர் தகவல்


நுண்ணீர் பாசனம் அமைக்க ரூ.21¾ கோடி ஒதுக்கீடு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 3 July 2021 6:17 PM GMT (Updated: 3 July 2021 6:17 PM GMT)

நுண்ணீர் பாசனம் அமைக்க ரூ.21¾ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறினார்.

கரூர்
குளித்தலை மற்றும் தோகைமலை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கே.பேட்டை, சத்தியமங்கலம், பனிக்கம்பட்டி, இனுங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் நலத்திட்டங்கள் குறித்தும், அதன் பயன்பாடுகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி பாசன பகுதிகள் தவிர பிற பகுதிகள் மானாவாரி மற்றும் தோட்டக்கால் பகுதியாகும். தமிழ்நாட்டில் தான் 5 ஏக்கருக்குள் நிலம் இருக்கும் சிறுகுறு விசாயிகளுக்கு நுண்ணீர் பாசம் அமைக்க 100 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஏனைய விவசாயிகளுக்கு 12.5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைக்க 75 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கரும்பு பயிருக்கு கூடுதலாக திறந்த வெளிகிணறு மூலம் நிலத்திற்கு மேல் பரப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க எக்ேடருக்கு ரூ.38,235-ம், நிலத்திற்கு உள்பகுதியில் நுண்ணீர்பாசனம் அமைக்க ரூ.49,758-ம், ஆழ்குழாய் கிணறு மூலம் நிலத்திற்கு மேற்பரப்பில் நுண்ணீர்பாசனம் அமைக்க ரூ.24,711-ம், நிலத்திற்கு உள்ளேஅமைக்க ரூ.36,234--ம் வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் நடப்பு நிதியாண்டிற்கு 1,350 எக்டேரில் நுண்ணீர் பாசனம் அமைத்திட, ரூ.6.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, தோட்டக்கலைத்துறையின் மூலம் 2,500 எக்டேர் பரப்பளவில் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனம் அமைக்க ரூ.15 கோடி இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனம் அமைக்க 3,850 எக்டேருக்கு ரூ.21 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

Next Story