தஞ்சை பெரிய கோவில் நாளை திறப்பு


தஞ்சை பெரிய கோவில் நாளை திறப்பு
x
தினத்தந்தி 3 July 2021 8:50 PM GMT (Updated: 3 July 2021 8:50 PM GMT)

80 நாட்களுக்கு பிறகு பெரியகோவில் நாளை (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்;
கொரோனா ஊரடங்கு காரணமாக தஞ்சை பெரியகோவில் கடந்த ஏப்ரல் மாதம்16-ந்தேதி முதல் மூடப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் 80 நாட்களுக்கு பிறகு பெரியகோவில் நாளை (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தஞ்சை பெரியகோவில்
கொரோனா 2-வது அலை காரணமாக தஞ்சை பெரியகோவில் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி மூடப்பட்டது.
அன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கோவிலில் தினமும் 4 கால பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன. இதே போல் பெரியகோவிலில் உள்ள நந்தியம் பெருமானுக்கும் பக்தர்கள் இன்றி பிரதோஷ வழிபாடு நடைபெற்று வந்தது.
நாளை திறப்பு
இந்த நிலையில் தமிழகத்தில் பாரம்பரிய சின்னங்கள் மற்றும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவு சின்னங்கள், வழிபாட்டு தலங்கள் திறக்க அரசு அனுமதி அளித்ததையடுத்து, தஞ்சை பெரியகோவில் நாளை (திங்கட்கிழமை) முதல் பக்தர்கள் வழிபாட்டுக்காக திறக்கப்படுகிறது. 80 நாட்களுக்கு பிறகு பெரிய கோவில் திறக்கப்பட உள்ளதால் பெருவுடையார் சன்னதி, பெரியநாயகி அம்மன் சன்னதி மற்றும் வராகி அம்மன் சன்னதி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், கருவூரார், முருகன் சன்னதிகள் ஆகிய சன்னதிகளுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 2 அடி இடைவெளி விட்டு வட்டம் வரையப்பட்டு உள்ளது. பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக 2 வழிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
கிருமி நாசினி தெளிப்பு
கோவிலுக்குள் வரும் பக்தர்கள் அனைவருக்கும் நுழைவு வாயிலில் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டு வெப்ப பரிசோதனையும் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முககவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story