கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அரசு தயார்: மக்கள் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை - முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு


கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அரசு தயார்: மக்கள் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை - முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு
x
தினத்தந்தி 3 July 2021 9:18 PM GMT (Updated: 3 July 2021 9:18 PM GMT)

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதால், மக்கள் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:
  
  பெங்களூருவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாவது;-

எதிர்கொள்ள அரசு தயார்

  நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையின் தீவிரம் குறைந்து வருகிறது. கொரோனா 3-வது அலை வருவதற்கு வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் குழுவினர் கூறி வருகிறார்கள். கொரோனா 2-வது அலையை எதிர்கொண்டதன் மூலம் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் பல்வேறு அனுபவங்கள் கிடைத்துள்ளது. இந்த அனுபவத்தின் மூலம் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அரசு ஏற்கனவே முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து அதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது.

  கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள இப்போதில் இருந்தே அரசு தயாராக உள்ளது. எனவே மக்கள் யாரும் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை. தினமும் கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் தடுப்பூசி போட்டு கொள்ளும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. சிறு, சிறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மாநிலத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

தடுப்பூசி போடும் பணி...

  இனிவரும் நாட்களில் மாநிலத்தில் கூடுதலாக தடுப்பூசிகள் பெறப்பட்டு மக்களுக்கு போடும் பணிகள் நடைபெறும். தடுப்பூசி போடும் பணி மாநிலம் முழுவதும் தீவிரமாக்கப்படும். ஒவ்வொரு பொதுமக்களும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டு கொள்ளும் விவகாரத்தில் யாரும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. இதன்மூலம் கொரோனாவில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ள முடியும். கொரோனா 2-வது அலையில் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

  அரசின் நிதி நிலை மோசமாக இருந்தாலும் மக்களின் நலன் கருதி பல்வேறு தரப்பினருக்கும் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. நாட்டில் எந்த மாநிலத்திலும் கொரோனாவுக்கு பலியான நபர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. கர்நாடகத்தில் மட்டுமே ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது. கட்டிட தொழிலாளர்கள், ஆட்டோ, கார் டிரைவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில், அவர்களது வங்கி கணக்குக்கே நிவாரணம் உதவி செலுத்தப்பட்டு வருகிறது.
  இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

Next Story