6-ம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்கி ஆசிரியர்கள் அசத்தல்


6-ம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்கி ஆசிரியர்கள் அசத்தல்
x
தினத்தந்தி 4 July 2021 2:58 AM GMT (Updated: 4 July 2021 2:59 AM GMT)

சின்னாளபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்கி ஆசிரியர்கள் அசத்தினர்.

திண்டுக்கல்,

சின்னாளபட்டியில் நூற்றாண்டு பழமையான அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்கப்படுகிறது.

மேலும் இந்த பள்ளியில் ஆங்கில வழி கல்வியும் உள்ளது. இதன் காரணமாக தற்போது இந்த பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். தொடக்கத்தில் 52 மாணவர்கள் இந்த பள்ளியில் படித்து வந்த நிலையில் தற்போது 100 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளிக்கு மாணவர்களை அழைத்துவர வாகன வசதியும் உள்ளது. இதற்கான செலவை ஆசிரியர்கள் ஏற்றுள்ளனர். 

இதுமட்டுமின்றி தற்போது வழங்கப்படும் ரூ.1,000 பரிசு தொகையும் ஆசிரியர்கள் தங்களின் சொந்த பணத்தில் இருந்து வழங்கி அசத்தியுள்ளனர். நேற்று இந்த பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்ந்த ஒரு மாணவனுக்கு தலைமை ஆசிரியை பானுரேகா ரூ.1,000 மற்றும் புத்தக பையை பரிசாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர்.

Next Story