பேரணாம்பட்டு அருகே சுவர் இடிந்து 11 ஆடுகள் பலி


பேரணாம்பட்டு அருகே சுவர் இடிந்து 11 ஆடுகள் பலி
x
தினத்தந்தி 4 July 2021 12:08 PM GMT (Updated: 4 July 2021 12:08 PM GMT)

பேரணாம்பட்டு அருகே பலத்த மழைகாரணமாக சுவர் இடிந்து விழுந்து 11 ஆடுகள் பலியாகின.

பேரணாம்பட்டு

பலத்த மழை

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சி தினங்களாக மாலை முதல் இரவு வரை இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் மழை பெய்துவருகிறது. கடந்த 2-ந் தேதி 56 மி.மீ. மழையும்,நேற்று முன்தினம் 19 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

கடந்த 3 தினங்களாக இப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழையினால் பத்தலப்பல்லி, மதினாப்பல்லி மலட்டாறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.  பேரணாம்பட்டு அருகே உள்ள மிட்டப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (48). இவர் தனது வீட்டருகே மண் சுவரில் ஒலை கொட்டகை  அமைத்து அதில் 25-க்கு மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய ஆடுகளை பட்டியில் அடைத்திருந்தார்.

சுவர் இடிந்து 11 ஆடுகள் பலி

நேற்று அதிகாலை 4 மணியளவில் ஆடுகள் கத்தும்  சத்தம் கேட்டுள்ளது. உடனே ரமேஷ் சென்று பார்த்த போது மண் சுவர், கூரையுடன் இடிந்து விழுந்திருந்தது. அதன் இடிபாடுகளுக்குள் ஆடுகள் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதைக் கண்டு ரமேஷ் அதிர்ச்சியடைந்த அவர் ஆடுகளை மீட்க முயன்றார். அப்போது இடிபாடுகளில் சிக்கி 2 குட்டிகள், 9 ஆடுகள் என மொத்தம் 11 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்திருந்தது.  இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 14 ஆடுகளை உயிருடன் மீட்டார். அதில் 2 ஆடுகளுக்கு காயம் ஏற்பட்டிருந்தது.
பலத்த மழைகாரணமாக ஆட்டு கொட்டகை அமைக்கப்பட்டிருந்த மண் சுவர் இடித்து விழுந்தது தெரியவந்தது. 

இது குறித்து தகவலறிந்த மசிகம் கிராம நிர்வாக அலுவலர் கோபி நேரில் சென்று விசாரணை நடத்தினார். ஏரிகுத்தி கால்நடை மருத்துவமனை மருத்துவர் தமிழரசன் சென்று காயமடைந்த 2 ஆடுகளுக்கு சிகிச்சையளித்து, இறந்த ஆடுகளுக்கு அங்கேயே பிரேத பரிசோதனை செய்தார்.


Next Story