வேலூர் மாவட்டத்தில் 2¾ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது


வேலூர் மாவட்டத்தில் 2¾ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 4 July 2021 12:31 PM GMT (Updated: 4 July 2021 12:31 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 2¾ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் தெரிவித்தார்.

வேலூர்

கொரோனா தடுப்பூசி

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்று பாதிப்பினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் 11 நிரந்தர தடுப்பூசி முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதைத்தவிர தடுப்பூசிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முகாம்களுக்கு அதிகளவு இளம்பெண்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி போட்டு கொள்கிறார்கள். வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 44 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

2¾ லட்சம் பேருக்கு...

இதுகுறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் கூறியதாவது:- 

சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் வசதிக்காக 11 நிரந்தர தடுப்பூசி மையங்கள், சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் தினமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதைத்தவிர தடுப்பூசிகள் வருகைக்கு ஏற்ப கூடுதல் முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. 

தமிழகத்தில் அதிகம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் 4-வது இடத்தில் வேலூர் மாவட்டம் உள்ளது. இதுவரை 2 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு முதல் டோஸ், 69 ஆயிரம் பேருக்கு 2-வது டோஸ் என்று 3 லட்சத்து 44 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாத நபர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடாத பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பின்னர் அங்கு தடுப்பூசி முகாம் அமைக்கப்படும். அரசின் வழிகாட்டு நெறிமுறையின்படி கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி விரைவில் தொடங்கும். 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story