25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்


25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 4 July 2021 1:37 PM GMT (Updated: 4 July 2021 1:37 PM GMT)

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

25 சதவீத இடஒதுக்கீடு

தமிழகத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் 2009 பிரிவு 12 (1) சி- யின்படி சிறுபான்மை அல்லாத அனைத்து தனியார் பள்ளிகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி. அல்லது 1-ம் வகுப்புகளில் குறைந்தபட்சம் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
 
 இந்த நிலையில் 2021-2022ம-் கல்வியாண்டில் சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. அல்லது முதல் வகுப்புகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர விரும்புபவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர் இன்று (திங்கட்கிழமை)  முதல் ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் https://rte.tnschoolsgov.in/ என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

புகார் தெரிவிக்கலாம்

பள்ளியில் உள்ள இடங்களை விட அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தால் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி குலுக்கல் முறையில் மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதே தினத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட விவரங்களை பள்ளி அறிவிப்பு பலகையிலும் பள்ளிக்கல்வித்துறை இணையத்திலும் வெளியிட வேண்டும். 

இந்த நடைமுறையில் ஏதேனும் புகார் இருந்தால் தெரிவிக்கலாம் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை துணை ஆய்வாளர் தாமோதரன் கூறுகையில் பெற்றோரின் புகார் அல்லது ஆலோசனைகள் பெற விரும்பினால் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் மேலும் மாநில அளவில் மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் அல்லது தொடக்கக் கல்வி இயக்குனரிடம் தெரிவிக்கலாம் என்றார்.

Next Story