உடுமலையில் முதல் கட்டமாக இன்று முதல் 50 அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது


உடுமலையில் முதல் கட்டமாக  இன்று முதல் 50 அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது
x
தினத்தந்தி 4 July 2021 4:04 PM GMT (Updated: 4 July 2021 4:04 PM GMT)

உடுமலையில் முதல் கட்டமாக இன்று முதல் 50 அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது

உடுமலை, 
உடுமலையில் முதல் கட்டமாக  இன்று முதல் 50 அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்கள் கழுவி சுத்தப்படுத்தி தயார்படுத்தப்பட்டன.
கொரோனா வைரஸ்
கொரோனா ஊரடங்கு காரணமாக பஸ்கள் இயக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதில், அரசு சில கூடுதல் தளர்வுகளையும் அறிவித்துள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
உடுமலை கிளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் வெளியூர் செல்லும் பஸ்கள் 36-ம், டவுன் பஸ்கள் 58-ம், ஸ்பேர் பஸ்கள் 7-ம் என மொத்தம் 101 பஸ்கள் உள்ளன. இந்த பஸ்களில் பராமரிப்பு பணிகள் முடிந்து பஸ்கள் இயக்கப்படுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
50 அரசு பஸ்கள்
இந்த நிலையில் முதல் கட்டமாக இன்று முதல், உடுமலை அரசு போக்குவரத்து கழக பஸ்களில் வெளியூர் செல்லும் பஸ்கள் 20 மற்றும் டவுன் பஸ்கள் 30 என மொத்தம் 50 பஸ்களை இயக்குவதற்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அந்த 50 பஸ்கள் நேற்று எந்திரம் மூலம் தண்ணீரால் கழுவி, பஸ்சின் இருக்கைகள் உள்ளிட்ட பகுதிகள் துடைத்து சுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன. இந்த பணிகள் உடுமலை கிளை அரசு போக்குவரத்துக்கழக மேலாளர் மணிகண்டன் மேற்பார்வையில் நேற்று நடந்தது. இந்தபஸ்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது.

Next Story