பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு


பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு
x
தினத்தந்தி 4 July 2021 7:02 PM GMT (Updated: 4 July 2021 7:02 PM GMT)

விருதுநகரில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர், 
விருதுநகரில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 
பாதாள சாக்கடை திட்டம் 
விருதுநகரில் கடந்த 2008-ம் ஆண்டு பொதுமக்கள் பங்களிப்புடன் பாதாள சாக்கடை திட்டப்பணி, குடிநீர் வடிகால் வாரியத்தால் தொடங்கப்பட்டது.
3 ஆண்டுகளில் திட்ட பணி முடிக்கப்பட்டு திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என்று உறுதி அளிக்கப்பட்ட து. இந்நிலையில் திட்டம் தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் இன்னும் பணி முடியாத நிலை நீடிக்கிறது. இன்னும் வீடுகளுக்கான இணைப்பு வழங்கப்படாத நிலையில் இத்திட்டம் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை. அதற்குள் குடிநீர் வடிகால் வாரியம் இத்திட்டத்தை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்த நிலையில் இறுதிகட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
நவீன எந்திரம் 
இந்த திட்டம் முழுமையாக முடிந்து எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று நகராட்சி நிர்வாகத்தாலும் உறுதி கொள்ள முடியாத நிலை நீடிக்கிறது. உடனடி நடவடிக்கை எடுப்பதில்லை.  இதனால் விருதுநகர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுகிறது. குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்க நகராட்சி நிர்வாகம் அதற்கான வாகனங்களை வாங்கி உள்ளது. மேலும் சமீபத்தில் இயற்கை எரிவாயு நிறுவனம் ரூ.35 லட்சம் மதிப்புள்ள நவீன ரோபோ எந்திரத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம் உடனடியாக பாதாள சாக்கடை குழாயில் உள்ள அடைப்பை நீக்க வாய்ப்பு உள்ளது.
அவசியம் 
 ஆனாலும் நகராட்சி நிர்வாகம் இதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்காமல் தயக்கம் காட்டுவது ஏன்? என்று தெரியவில்லை.  இதற்கென தனியாக பணியாளர்களை நியமித்து கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை அவசியமாக உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை குழாய்களிலிருந்து கழிவு நீர் வெளியேறுவதை உடனடியாக தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதாள சாக்கடைகளில் அடைப்பு நீக்க நவீன எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ள நிலையில் அதனை முறையாக பயன்படுத்தி கழிவுநீர் வெளியேறுவதை உடனடியாக தடுக்க ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியமாகும். மேலும் திட்ட பணியை விரைந்து முடித்து திட்டத்தையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story