உழவர் சந்தையை திறக்க வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு


உழவர் சந்தையை திறக்க வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 6 July 2021 5:10 PM GMT (Updated: 6 July 2021 5:10 PM GMT)

கள்ளக்குறிச்சியில் உழவர் சந்தையை திறக்க வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி சுந்தரவிநாயகர் தெருவில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் விவசாய நிலத்தில் உற்பத்தி செய்த காய்கறிகள், பழவகைகள், கீரைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். 

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக உழவர் சந்தை மூடப்பட்டது. இதையடுத்து கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் உழவர் சந்தை தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. பின்னர் அங்கும் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து கடந்த 20 நாட்களாக சாலை ஓரங்களில் விவசாயிகள் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். 

இதற்கிடைய கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரிடம் விவசாயிகள் கொடுத்த மனுவில், சாலை ஓரங்களில் கடை வைத்து வியாபாரம் செய்வதால் ஒவ்வொரு விவசாயியிடமும் ரூ.40 சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் அனைத்துகடைகளும் திறக்கப்பட்டுள்ளது. பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் உழவர்சந்தை மட்டும் திறக்கப்படாமல் உள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி உழவர் சந்தைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

Next Story