ஆட்டோ-மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது மேலும் 15 பேருக்கு போலீசார் வலைவீச்சு


ஆட்டோ-மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது மேலும் 15 பேருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 7 July 2021 4:06 AM GMT (Updated: 7 July 2021 4:06 AM GMT)

தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

மதுரவாயல்-தாம்பரம் பைபாஸ் சாலையில் கடந்த 4-ந்தேதி அதிகாலையில் ஆட்டோ பந்தயம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீஸ் துரத்துவதை அறிந்த போட்டியாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அப்போது போட்டியில் பங்கேற்ற ராமாபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 35), என்பவரை போலீசார் கைது செய்தனர்.இந்த நிலையில், பந்தயத்தை நடத்தியவர்களை பிடிப்பதற்காக போரூர் இன்ஸ்பெக்டர்கள் ரவி, ரூபி சகாயமேரி, மாங்காடு இன்ஸ்பெக்டர் தியாகராஜன், திருவேற்காடு இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும் பந்தயத்தில் கலந்து கொண்டு போலீசிடம் சிக்கிய சீனிவாசனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையிலும், சம்பவ பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளின் அடிப்படையிலும், தீவிர விசாரணை செய்யப்பட்டது.

12 பேர் கைது

விசாரணையைத் தொடர்ந்து ராமாபுரத்தை சேர்ந்த சீனிவாசன் (35), பரணிபுத்தூரைச் சேர்ந்த ஸ்ரீதர் (34), கொரட்டூரை சேர்ந்த ரசூல் பாட்ஷா (39), பரணிபுத்தூரை சேர்ந்த மோகன் (என்ற) வெள்ளைமோகன் (39) உள்ளிட்ட 12 பேர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து தற்போது 3 ஆட்டோக்கள், 3 மோட்டார்சைக்கிள்கள், 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்ட மேலும் 15-க்கும் மேற்பட்டோரை தேடப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த பந்தயத்திற்கு தலைவனாக செயல்பட்ட முகப்பேரைச் சேர்ந்த சந்துரு (35), என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வாட்ஸ்-அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் பந்தய நாள் தேதி அறிவிக்கப்பட்டு ஆட்டோ பந்தயம் நடைபெற்று வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, ஆட்டோ பந்தயம் நடைபெறும் சாலைப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இரவு பகலாக ரோந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Next Story