திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 7 July 2021 6:10 AM GMT (Updated: 7 July 2021 6:10 AM GMT)

ஒவ்வொரு திங்கட்கிழமையும் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.

திருவள்ளூர்,

ஒவ்வொரு திங்கட்கிழமையும் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், பொது மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று சற்று குறைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக மனுக்களை அளிப்பதற்கு மாற்றாக திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு என 9 தாசில்தார் அலுவலகங்களில் இருந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் காணொலி் காட்சி மூலமாக பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.

பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள ஒவ்வொரு வட்டத்திற்கும் மாவட்ட கலெக்டரால் நியமனம் செய்யப்பட்டுள்ள துணை கலெக்டர் நிலையிலான மண்டல அலுவலர்கள் மூலமாக மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து 65 மனுக்கள் பெறப்பட்டது. அதே முறையில் ஒவ்வொரு திங்கட் கிழமையும் பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் குறைதீர்க்கும் நாள் மனுக்களை சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தில் காணொலி காட்சி வாயிலாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பித்து தங்களது கோரிக்கைகளை குறித்து உரிய தீர்வு பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமுக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி தலைமை தாங்கினார். பள்ளிப்பட்டு தாசில்தார் கதிர்வேல் முன்னிலை வகித்தார். பள்ளிப்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story