திருப்பூர், பல்லடத்தில்தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்


திருப்பூர், பல்லடத்தில்தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்களை கலெக்டர்  ஆய்வு செய்தார்
x
தினத்தந்தி 7 July 2021 3:19 PM GMT (Updated: 7 July 2021 3:19 PM GMT)

திருப்பூர், பல்லடத்தில்தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்

திருப்பூர்:
திருப்பூர், பல்லடத்தில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் ரூ.2 கோடியே 64 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்களை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.
 கலெக்டர் ஆய்வு
திருப்பூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் நீட்ஸ் உள்பட 3 திட்டங்களின் கீழ் திருப்பூர் மாநகராட்சி, பல்லடம் பகுதிகளில் ரூ.53 லட்சம் மானிய உதவியுடன் ரூ.2 கோடியே 64 லட்சம் மதிப்பில்  தொழில் தொடங்கப்பட்டுள்ளது. 
அதன்படி திருப்பூர் கே. வி. ஆர். நகரில் சித்ரா என்ற பெண் தொடங்கிய பாக்கு மட்டை தட்டுகள் தயாரிக்கும் தொழில் நிறுவனத்தையும், தென்னம்பாளையத்தில் ஆனந்தபாபு என்பவர் தொடங்கிய ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார். அதுபோல் நீட்ஸ் திட்டத்தின் கீழ் பல்லடம் வேலாயுதம்பாளையத்தில் ஸ்ரீ சங்கவி என்ற தொழில் முனைவோர் தொடங்கிய தானியங்கி விசைத்தறி நிறுவனத்தையும், கல்பனா என்ற தொழில் முனைவோர் தொடங்கிய பருத்தி நூல் தயாரிப்பு நிறுவனத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
விரைந்து கடன் வழங்க வேண்டும்
இந்த ஆண்டில் இந்த திட்டங்களின் கீழ் இலக்குக்கு மேலாக தொழில் நிறுவனங்களை தொடங்கி தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து வங்கிகளுக்கு அனுப்பி பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையை சேர்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த திட்டத்தின் கீழ் தொழில் நிறுவன பயனாளிகளிடம் கருத்துக்களை கேட்டு திட்டங்களை விரைந்து செயல்படுத்தி குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வங்கிகளில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுத்து விரைந்து கடன் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன் மற்றும் உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.

Next Story