விபத்தில் காயம்: ‘பிகில்’ படத்தை காண்பித்து சிறுவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை


விபத்தில் காயம்: ‘பிகில்’ படத்தை காண்பித்து சிறுவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை
x

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்த சிறுவனுக்கு, ‘பிகில்’ படத்தை காண்பித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்த ருசிகர சம்பவம் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது.

சென்னை,

சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் சசிவர்ஷன், தனது மாமா அரவிந்த் என்பவருடன், நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்றார்.

அண்ணாசாலை அருகே பட்டுலாஸ் சாலையில் அவர்கள் வந்தபோது பின்னால் உட்கார்ந்திருந்த சிறுவன் தூக்க கலக்கத்தில் கீழே விழுந்து விட்டான். இதில் சிறுவனுக்கு நெற்றி, முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் துடித்தான். உடனே அவனை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

நடிகர் விஜய்யை பிடிக்கும்

சிறுவனுக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டதால், தையல் போட்டு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். அதனால், சிறுவனுக்கு முதலில் ஊசி போடுவதற்காக டாக்டர்கள் முயன்றனர். ஆனால் சிறுவன் பயத்தில், ‘ஊசி வேண்டாம்’ என அடம்பிடித்து, சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. எவ்வளவோ முயன்றும், சிறுவன் சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால், டாக்டர்கள் என்ன செய்வதென்று புரியாமல் தவித்தனர்.

அப்போது அங்கு இரவு பணியில் இருந்த தன்னார்வலர் ஜின்னா என்பவர், சிறுவனிடம் நைசாக பேச்சு கொடுத்து, ‘உனக்கு என்ன பிடிக்கும்? என சிறுவனிடம் கேட்டார்’. அதற்கு சிறுவன், தனக்கு நடிகர் விஜய்யை மிகவும் பிடிக்கும் என்று வலியில் அழுது கொண்டே கூறியுள்ளான்.

‘பிகில்’ படத்தை காண்பித்து சிகிச்சை

மேலும் விஜய்யின் படங்கள், பாடல்கள், வசனங்கள் எல்லாம் தனக்கு, மனப்பாடமாக தெரியும் எனவும், காயம் ஏற்பட்ட வலி, வேதனையிலும், நடிகர் விஜய்யை பற்றி சலிக்காமல் பதில் அளித்து கொண்டே இருந்தான். அப்போது, அவர், தனது செல்போனில் வைத்திருந்த விஜய்யின் ‘பிகில்’ படத்தை போட்டு சிறுவனிடம் கொடுத்துள்ளார். அதை சிறுவன் வாங்கிக்கொண்டு, உற்சாக மிகுதியில், உடலில் ரத்தம் வழிந்த நிலையிலும், மெய் மறந்து பார்த்துக்கொண்டிருந்தான். அந்த வேளையில், டாக்டர்கள், சிறுவனுக்கு வலி தெரியாமல் இருக்க ஊசி மூலம் மருந்து செலுத்தி், தையல் போட்டு சிகிச்சை அளித்தனர்.

விபத்தில் காயம் அடைந்த சிறுவனுக்கு, வலி தெரியாம இருக்க விஜய்யின் ‘பிகில்’ படத்தை போட்டு காண்பித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் ருசிகரத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story