திருவள்ளூர் அருகே கஞ்சா விற்ற சகோதரர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


திருவள்ளூர் அருகே கஞ்சா விற்ற சகோதரர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 8 July 2021 6:17 AM GMT (Updated: 8 July 2021 6:17 AM GMT)

திருவள்ளூர் அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சகோதரர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர்கள் அம்பேத் அம்பேத்கர் (வயது 25), சூர்யா (24). இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக திருவள்ளூர் தாலுகா போலீசார் ஏற்கனவே பலமுறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், சிறையிலிருந்து வெளிவந்த பிறகும் சகோதரர்கள் 2 பேரும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் அம்பேத்கர் (25), சூர்யா (24) ஆகிய 2 பேரையும் மீண்டும் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

குண்டர் சட்டத்தில் கைது

இந்த நிலையில், பலமுறை போலீசார் எச்சரித்தும் மீண்டும், மீண்டும் இவர்கள் 2 பேரும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் மாவட்ட கலெக்டர் மேற்கண்ட 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து 2 பேரும் புழல் மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டனர்.

Next Story