அரூர் பகுதியில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை அதிகாரிகள் எச்சரிக்கை


அரூர் பகுதியில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை அதிகாரிகள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 July 2021 7:55 PM GMT (Updated: 8 July 2021 7:55 PM GMT)

அரூர் பகுதியில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரூர்:

அதிகாரிகள் ஆய்வு
அரூர் பகுதியில் தனியார் உரக்கடைகளில் களைக்கொல்லி மருந்துகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அரூரில் உள்ள உரம், பூச்சி மருந்து விற்பனை கடைகளில் வேளாண்மை இணை இயக்குனர் வசந்தரேகா, வேளாண்மை தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன், அரூர் வேளாண்மை உதவி இயக்குனர் மோகன் சகாயராஜ் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது உரம், பூச்சி மருந்து விற்பனை, விலை விவரம் குறித்த பட்டியல் விவசாயிகளுக்கு தெரியும்படியாக வைக்கப்பட்டுள்ளதா எனவும், பூச்சி மற்றும் களைக்கொல்லி மருந்து இருப்புகள், கொள்முதல் பட்டியல், விவசாயிகளுக்கு விற்பனை செய்த ரசீதுகள் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
கடும் நடவடிக்கை
மேலும் இடுபொருட்களை விற்பனை செய்யும்போது விவசாயிகளுக்கு ரசீது வழங்க வேண்டும். உரங்களை கண்டிப்பாக அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
மேலும் கூடுதல் விலைக்கு பூச்சிமருந்து, களைக்கொல்லி விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், விற்பனை தடை செய்யப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடுமையாக எச்சரிக்கை விடுத்தனர். விவசாயிகள், தாங்கள் வாங்கும் இடுபொருட்களுக்கு ரசீது கேட்டு வாங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.


Next Story