கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி


கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி
x
தினத்தந்தி 9 July 2021 7:22 PM GMT (Updated: 9 July 2021 7:22 PM GMT)

போச்சம்பள்ளி அருகே மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலியானார்.

மத்தூர்:

போச்சம்பள்ளி அருகே மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலியானார். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தற்காலிக மின் ஊழியர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மேல் மைலம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சுரேஷ் (வயது 35). இவர் ஊராட்சியில் தற்காலிக மின் ஊழியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அவர் போச்சம்பள்ளி அருகே அப்புகொட்டாய் பகுதியில் உள்ள ஊராட்சி தெரு விளக்கு பழுதை சரி செய்வதற்காக மின் கம்பத்தில் ஏறினார்.
அவர் மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியை செய்து கொண்டிருந்தார். அப்போது புளியம்பட்டியை சேர்ந்த ஹரி (40) என்பவர், சுவிட்ச்சை ஆன் செய்ததாக கூறப்படுகிறது. இதில் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த சுரேசை மின்சாரம் தாக்கியது.
மின்சாரம் தாக்கி பலி
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போச்சம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மின்சாரம் தாக்கி  தற்காலிக மின் ஊழியர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story