பேராசிரியை மர்ம சாவு


பேராசிரியை மர்ம சாவு
x
தினத்தந்தி 10 July 2021 7:04 PM GMT (Updated: 10 July 2021 7:04 PM GMT)

தனியார் கல்லூரி பேராசிரியை மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை, 

காஞ்சீபுரம் ஓரிக்கை அங்காள பரமேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் அனிதா (வயது 45). இவர், காஞ்சீபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றிவந்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

நேற்று முன்தினம் வழக்கம்போல் பணி முடிந்து வீட்டுக்கு வந்த அனிதா, வீட்டின் மாடியில் உள்ள அவரது அறைக்கு சென்று விட்டார். தரைதள வீட்டில் அவருடைய அக்காள் சண்முக கனி, அவருடைய கணவர் வெள்ளைச்சாமி ஆகியோர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திடீரென இரவு 11 மணியளவில் மாடியில் இருந்து சத்தம் கேட்கவே வெள்ளைச்சாமி, விரைந்து சென்று வீட்டின் கதவைதட்டினார்.

நீண்ட நேரமாகியும் அனிதா கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, படுக்கை அறையில் அனிதா உதட்டில் ரத்தகாயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி பேராசிரியை அனிதாவின் மர்ம சாவுக்கான காரணம் என்ன?. அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

Next Story