தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 162 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 162 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 10 July 2021 8:55 PM GMT (Updated: 10 July 2021 8:55 PM GMT)

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 162 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர்:

உச்சநீதிமன்றம், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்பேரில், பெரம்பலூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சுபாதேவி தலைமை தாங்கினார்.
இதில் மகிளா நீதிமன்ற நீதிபதியும், நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவருமான (பொறுப்பு) கிரி, எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர்விழி, தலைமை நீதித்துறை நடுவர் மூர்த்தி, சார்பு நீதிபதி ஷகிலா, சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான லதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மகாலெட்சுமி, நீதித்துறை நடுவர்கள் சுப்புலெட்சுமி, சங்கீதா, முனிக்குமார் ஆகியோர் கொண்ட அமர்வானது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து தீர்வு வழங்கியது.
இதில் ஒரு வங்கி வழக்கில் ரூ.10 லட்சத்துக்கும், 23 மோட்டார் வாகன விபத்து வழக்குகள் ரூ.71 லட்சத்து 74 ஆயிரத்து 323-க்கும், 8 சிவில் வழக்குகள் ரூ.92 லட்சத்து 93 ஆயிரத்து 444-க்கும், 130 சிறு அளவிலான குற்றவியல் வழக்குகள் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 700-க்கும் என மொத்தம் 162 வழக்குகளுக்கு ரூ.1 கோடியே 76 லட்சத்து 3 ஆயிரத்து 467-க்கு தீர்வு காணப்பட்டது.
தீர்வு பெறப்பட்ட வழக்கின் மனுதாரர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சுபாதேவி, நஷ்ட ஈடு தொகைக்கான காசோலையை வழங்கினார். இதில் வக்கீல்கள்- மனுதாரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Next Story