4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?


4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?
x
தினத்தந்தி 11 July 2021 6:55 PM GMT (Updated: 11 July 2021 6:55 PM GMT)

விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை பண்ருட்டி, நெய்வேலி ஆர்ச்கேட், வடலூர், சேத்தியாத்தோப்பு, கும்பகோணம் வழியாக செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கின்றன. அதுபோல் என்.எல்.சி. நிறுவனத்தில் உள்ள சுரங்கங்கள், அனல்மின் நிலையங்களுக்கு பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்களில் இங்குள்ள சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது.
இதனால் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த சாலை கருதப்படுகிறது. ஆனால் இந்த சாலைகள் குறுகலாகவும், சாலையின் ஓரங்களில் குடியிருப்புகளும் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. அதோடு இந்த வழியில் உள்ள சாலைகளும் மிக மோசமான நிலையில் காணப்பட்டன.

4 வழிச்சாலையாக...

இதனை கருத்தில் கொண்டு விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரையிலான 165 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 4 வழிச்சாலையாக கடந்த 2006-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து 2010-ம் ஆண்டில் அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடையேயுள்ள சாலையையும், வழியில் உள்ள பாலங்களையும் புதிதாக அமைக்க ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாலும், நேரம் வீணாகுவதை கருத்தில் கொண்டும் விபத்தில்லா சாலைகளை அமைக்கும் வகையிலும் மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு ரூ.3,517 கோடி ஒதுக்கீடு செய்தது.

3 பிரிவுகளாக பணிகள்

இதையடுத்து விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரை 4 வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு சாலை பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் 3 பிரிவுகளாக பிரித்து பணிகள் தொடங்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் விக்கிரவாண்டி- சேத்தியாத்தோப்பு வரை ஒரு பிரிவாகவும், சேத்தியாத்தோப்பில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் வரை 2-வது பிரிவாகவும், சோழபுரத்தில் இருந்து தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் புறவழிச்சாலை வரை 3-வது பிரிவாகவும் பணிகள் ஒதுக்கப்பட்டன.
விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடையே 4 வழிச்சாலை அமையும் இடங்கள் வழியாக வெள்ளியனூர், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சேத்தியாத்தோப்பு, அணைக்கரை, திருப்பனந்தாள், கும்பகோணம், பாபநாசம் ஆகிய முக்கிய இடங்கள் உள்ளன. இந்த பகுதிகள் வழியாக ஆறுகள் செல்லும் இடங்களில் மட்டும் 102 இடங்களிலும், சாலை பகுதிகளில் 70 இடங்களிலும் பாலங்கள் அமைகின்றன. இதுதவிர 5 இடங்களில் ரெயில்வே மேம்பாலங்களும், 2 இடங்களில் புறவழிச்சாலைகளும், 3 இடங்களில் சுங்கச்சாவடிகளும் அமைக்கப்படுகின்றன. இந்த சாலை பணிகள் 2020-ம் ஆண்டு முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

மந்தகதியில்...

ஆனால் இந்த நான்கு வழிச்சாலை பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. இப்பணிக்காக சாலையின் இருபுறங்களில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. இதில் நிலம் கையகப்படுத்துவதில் பெரிய அளவில் சிக்கல்கள் எழவில்லை என்றாலும் சாலை அமைப்பதற்கான பணிகள் மந்தகதியிலேயே நடந்து வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணிக்கு என்.எல்.சி. நிர்வாகம் தங்கள் ஏரியில் சேமிப்பு வைத்திருந்த சாம்பல் கழிவுகளை இலவசமாக சிறப்பு அனுமதி பெற்று வழங்கி வருகிறது. இந்த சாம்பலை நூற்றுக்கணக்கான லாரிகளில் கொண்டு வந்து சாலையின் இருபுறங்களிலும் உள்ள பள்ளங்களில் நிரப்பப்பட்டு வருகிறது. தற்போது மேம்பாலங்கள், பாலங்கள், கால்வாய் பணிகள் நடைபெற்று வந்தாலும் கருங்கல் ஜல்லி, கான்கிரீட் கலவையை கொட்டி சமன் செய்தல், தார் சாலை அமைத்தல், சாலையின் நடுவே தடுப்பு அமைத்தல் ஆகிய பணிகள் ஒரு சில இடங்களில் மட்டுமே நடந்துள்ளது.
குறிப்பாக விக்கிரவாண்டியில் இருந்து கோலியனூர் வரை 10 கி.மீ. தூரத்திற்கு சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு உள்ள பகுதிகளில் சாலை பணிகள் நடைபெறவில்லை. கோலியனூரில் இருந்து கடலூர் மாவட்டம் ராசாப்பாளையம் வரை ஒரு சில இடங்களில் மட்டும் பாலம் பணிகள் முடிவுற்ற நிலையில் சாலை பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பிலேயே கிடக்கிறது.

திக்... திக்.... பயணம் 

இதனால் சாலைகள் மேடும், பள்ளமுமமாக காட்சியளிக்கிறது. வெயில் காலங்களில் இந்த சாலையில் புழுதி பறப்பதால் இதில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் மின்விளக்கு வசதி இல்லாமல் இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் சாலையில் இருக்கும் பள்ளம், மேடு தெரியாமல் தினசரி சாலை விபத்துகள் நடந்து வருகிறது. வாகன ஓட்டிகள் பலர், இந்த சாலையில் சற்று அதிவேகமாக வந்து நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். இவ்வாறு போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் படுமோசமாக இருக்கும் இந்த சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் தினம், தினம் திக்... திக்... பயணம் செய்து வருகின்றனர்.
தற்போது ஒரு வார காலமாக விழுப்புரம் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அந்த சாலைகள் மேலும் படுமோசமாகியுள்ளது. குறிப்பாக ராமையன்பாளையம், சுந்தரிப்பாளையம், வாணியம்பாளையம், சின்னக்கள்ளிப்பட்டு, கண்டரக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் சாலையின் பல இடங்கள் சேறும், சகதியுமாக காட்சியளிப்பதோடு சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இந்த நான்கு வழிச்சாலை பணிகளால் ஏற்கனவே சாலையை கடந்து செல்லும் வடிகால் வாய்க்கால்களை தூர்த்து விட்டனர். இதன் காரணமாக கடந்த ஆண்டுகளில் பெய்த மழையின்போது தண்ணீர் செல்ல வழியின்றி வயல்வெளிகளையும், குடியிருப்புகளையும் தண்ணீர் சூழ்ந்ததால் பார்ப்பதற்கு தீவுபோல் காட்சியளித்தது.

விரைந்து முடிக்கப்படுமா?

இனி வரும் காலமும் பருவமழை காலம் என்பதால் மழைக்காலம் தொடங்குவதற்குள் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். இல்லையெனில் தற்காலிகமாக சாலையை சீரமைப்பதோடு மட்டுமின்றி சாலையை கடந்து செல்லும் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலைமைதான் இனியும் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே நான்கு வழிச்சாலை பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணியை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story