சுயதொழில் தொடங்க அரசு மானியத்துடன் நிதியுதவி


சுயதொழில் தொடங்க அரசு மானியத்துடன் நிதியுதவி
x
தினத்தந்தி 12 July 2021 5:30 PM GMT (Updated: 12 July 2021 5:30 PM GMT)

வேலை வாய்ப்பற்றவரா, வேலை இல்லையா கவலையை விடுங்க சுயதொழில் தொடங்கி லாபம் சம்பாதிக்கலாம். சுயதொழில் தொடங்க அரசு மானியத்துடன் நிதியுதவி வழங்குகிறது. அந்த நிதியை பெற விண்ணப்பிப்பது குறித்து கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை,

வேலை வாய்ப்பற்றவரா, வேலை இல்லையா கவலையை விடுங்க சுயதொழில் தொடங்கி லாபம் சம்பாதிக்கலாம். சுயதொழில் தொடங்க அரசு மானியத்துடன் நிதியுதவி வழங்குகிறது. அந்த நிதியை பெற விண்ணப்பிப்பது குறித்து கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.

ரூ.15 லட்சம் வரை வங்கி கடன்

இது தொடர்பாக சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதற்காக தமிழக அரசால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் கீழ் வியாபாரம் மற்றும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலும் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.15 லட்சம் வரையிலும் வங்கி கடன் உதவி வழங்கப்படும்.
மேலும் திட்ட மதிப்பில் 25 சதவீதம் அதிகபட்சம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை அரசு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்திற்கு இந்நிதியாண்டிற்கு அரசு மானியமாக ரூ.65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவை சேர்ந்த ஆண்கள் 18 வயது முதல் 35 வயது வரையும், ஆதிதிராவிடர் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கையர், மற்றும் மாற்றுத்திறனாளிகள், 18 வயது முதல் 45 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதாரா்கள் சிவகங்கை மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் குடியிருத்தல் வேண்டும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேற்படி திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பள்ளி மாற்றுச்சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ், விலைப்புள்ளி பட்டியல்,  உடன் போட்டோ (2) பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் இரண்டு பிரதிகளை உரிய ஆவணங்களுடன் மாவட்ட தொழில் மையத்தில் கொடுக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்.
 இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story