கண்ணமங்கலம்; சிறுவனை கடத்த முயன்றதாக பெண் மீது தாக்குதல்


கண்ணமங்கலம்; சிறுவனை கடத்த முயன்றதாக பெண் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 13 July 2021 5:35 PM GMT (Updated: 13 July 2021 5:35 PM GMT)

கண்ணமங்கலத்தில் சிறுவனை கடத்த முயன்றதாக பெண்ணை பிடித்து பொதுமக்கள் தாக்கினர். அவரை போலீசார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

கண்ணமங்கலம்

கண்ணமங்கலத்தில் சிறுவனை கடத்த முயன்றதாக பெண்ணை பிடித்து பொதுமக்கள் தாக்கினர். அவரை போலீசார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

பெண் மீது தாக்குதல்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார், இவருடைய மனைவி அஞ்சலை. இவர்களுடைய மகன் சந்தோஷ் (வயது 4). நேற்று காலை சந்தோஷ் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த ஒரு பெண் சந்தோஷை கடத்த முயன்றதாக, பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் கூச்சலிட்டார். 

சத்தம் கேட்டு பொதுமக்கள் திரளாக கூடி அந்த பெண்ணை பிடித்து குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவரா? என கேட்டு சரமாரியாக தாக்கினர். 

இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டுச்சென்றனர். 

ஒப்படைப்பு

பின்னர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில், அந்த பெண் திருவண்ணாமலை அருகே உள்ள தலையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த வள்ளி (32) என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. 

மேலும் வேலூர் வசந்தபுரம் பகுதியில் உள்ள தனது கணவர்  வீட்டிலிருந்து தலையாம்பள்ளம் செல்லும்போது வழிதவறி அந்தப்பகுதிக்கு வந்ததும் தெரியவந்தது. 

அதைத்தொடர்ந்து கண்ணமங்கலம் போலீசார் வள்ளியை, அவரது உறவினர் சுரேஷ் என்பவர் மூலம் தலையாம்பள்ளத்துக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவத்தால் கண்ணமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து புகார் எதுவும் இல்லை என்பதால் வழக்குப்பதிவு செய்யவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

Next Story