விதை சட்டங்களை மீறினால் கடும் நடவடிக்கை-விற்பனையாளர்களுக்கு அதிகாரி எச்சரிக்கை


விதை சட்டங்களை மீறினால் கடும் நடவடிக்கை-விற்பனையாளர்களுக்கு அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 13 July 2021 6:07 PM GMT (Updated: 13 July 2021 6:07 PM GMT)

விதைச்சட்டங்களை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விற்பனையாளர்களுக்கு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிவகங்கை,

விதைச்சட்டங்களை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விற்பனையாளர்களுக்கு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விலை விவர பட்டியல்

இது குறித்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் விதை ஆய்வு துணை இயக்குனர் துரை கண்ணம்மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மாவட்ட விதை விற்பனையாளர்கள் தங்களது கடையில் கண்டிப்பாக விதை இருப்பு விவர பலகை மற்றும் விலை விவரப்பட்டியல் ஆகியவற்றை விவசாயிகள் பார்வையில் படும்படி வைத்து பராமரிக்க வேண்டும். மொத்த விற்பனையாளர்களிடமிருந்து விதைகள் வாங்கும்போது, அதற்கு உரிய படிவம் -2 ஐ பெற வேண்டும்.
மேலும் சான்று பெற்ற விதைகளின் கொள்கலன்களில் சீலிடப்பட்ட ஈய வில்லைகள் பொருத்தப்பட்டுள்ளதா? என்பதை சரி பார்த்து வாங்க வேண்டும். மேலும் விதை விவர அட்டையில் பயிர், ரகம், குறைந்தபட்ச முளைப்புத்திறன் சதவீதம், விதைத்தூய்மை சதவீதம், இனத்தூய்மை சதவீதம், சோதனை நாள், காலாவதி தேதி, பரிந்துரைக்கப்படும் பருவகாலம், விதைப்புக்கு ஏற்ற பகுதி முதலிய விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆதார விதைகள் வெண்மைநிறச்சான்று அட்டையுடனும், சான்று விதைகள் நீல நிறச் சான்று அட்டையுடனும் உள்ளதா? என்பதையும் சரி பார்க்க வேண்டும்.

கடும் நடவடிக்கை

வெளி மாநில மற்றும் தனியார் விதை உற்பத்தி நிறுவனங்களால் ஆராய்ச்சிகள் மூலம் புதிதாக உருவாக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும். பயிர் ரகங்கள் கண்டிப்பாக கோவை விதைச்சான்று இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, அதன் பிறகு விற்க வேண்டும். விதை விற்பனையாளர்கள் பதிவுச்சான்றை சரி பார்த்து அதன் பிறகே தனியார் பயிர் ரக விதைகளை விற்கலாம்.
 விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்யும் போது சம்பந்தப்பட்ட பயிர் ரகத்தின் குவியல் எண் மற்றும் காலாவதி நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு, விலைப்பட்டியல் உடனுக்குடன் வழங்க வேண்டும்.
இந்த அறிவுரைகளை பின்பற்ற தவறும் பட்சத்தில் விற்பனையாளர்கள் மீது விதைச்சட்டம் 1966, விதை விதிகள் 1968, விதைக்கட்டுப்பாட்டு ஆணை 1983 ஆகியவற்றின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

Next Story