தர்மபுரி சூப்பர் மார்க்கெட்டில் ரூ.3 லட்சம் திருடிய வாலிபர் கைது 2 பேருக்கு வலைவீச்சு


தர்மபுரி சூப்பர் மார்க்கெட்டில் ரூ.3 லட்சம் திருடிய வாலிபர் கைது 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 July 2021 4:27 PM GMT (Updated: 14 July 2021 4:27 PM GMT)

தர்மபுரியில் சூப்பர் மார்க்கெட்டின் ஜன்னலை உடைத்து ரூ.3 லட்சம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தர்மபுரி:
தர்மபுரியில் சூப்பர் மார்க்கெட்டின் ஜன்னலை உடைத்து ரூ.3 லட்சம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பணம் திருட்டு
தர்மபுரி எஸ்.வி. ரோடு பகுதியில் பல்வேறு வகையான பொருட்களை விற்கும் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. கடந்த 2-ந்தேதி இந்த சூப்பர் மார்க்கெட் வளாக கட்டிடத்தின் பின்பக்க ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் உளளே புகுந்து கல்லாவில் இருந்த ரூ.3 லட்சத்தை திருடி சென்றனர். இது தொடர்பாக சூப்பர் மார்க்கெட்டின் நிர்வாகி நரசிம்மன் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து திருட்டு நடைபெற்ற பகுதியில் பதிவாகி இருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்த போலீசார், அங்கு வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே தர்மபுரி பஸ் நிலையத்தில் போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
வாலிபர் கைது
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் தர்மபுரி டேக்கீஸ் பேட்டை பகுதியை சேர்ந்த முகமது அலி (வயது 24) என தெரியவந்தது. இவர் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து சூப்பர் மார்க்கெட்டில் ஜன்னலை உடைத்து ரூ.3 லட்சத்தை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் முகமது அலியை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த திருட்டில் தொடர்புடைய மேலும்  2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story