வியாபாரி வீட்டில் 14 பவுன் நகை கொள்ளை


வியாபாரி வீட்டில் 14 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 15 July 2021 4:43 PM GMT (Updated: 15 July 2021 4:43 PM GMT)

திருக்கோவிலூர் அருகே வியாபாரி வீட்டில் 14 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே  மணலூர்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 26). காய்கறி வியாபாரி. இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். இந்த நிலையில் அன்பரசன் வீட்டின்  கதவு திறந்து கிடந்தது. இதைபார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த குமார் என்பவர் உடனே செல்போன் மூலம் அன்பரசனுக்கு தகவல் தெரிவித்தார்.
 அதன்பேரில் அவர் விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீ்ட்டில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அதில் இருந்த 14 பவுன் நகைகளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. 

கதவு உடைப்பு

 இது குறித்த தகவலின் பேரில் திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு, மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அன்பரசன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. 
இதன் மதிப்பு ரூ.4½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story