கோவில் சொத்துகளை பாதுகாக்காமல் அறநிலையத்துறை அதிகாரிகள் அஜாக்கிரதையாக செயல்படுகின்றனர் ஐகோர்ட்டு கடும் கண்டனம்


கோவில் சொத்துகளை பாதுகாக்காமல் அறநிலையத்துறை அதிகாரிகள் அஜாக்கிரதையாக செயல்படுகின்றனர் ஐகோர்ட்டு கடும் கண்டனம்
x
தினத்தந்தி 16 July 2021 11:29 AM GMT (Updated: 16 July 2021 11:29 AM GMT)

கோவில் சொத்துகளை பாதுகாக்காமல் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அஜாக்கிரதையாக செயல்படுகின்றனர் என்று சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், ஜெபமணி மோகன்ராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘‘நுங்கம்பாக்கத்தில் உள்ள பழமையான அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக சுமார் 340 கிரவுண்ட் நிலம் உள்ளன. இதில் பெரும்பாலான நிலத்தை சட்டவிரோதமாக பலர் ஆக்கிரமித்துள்ளனர். இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் ஆகும். இதை மீட்க கோரி இந்து சமய அறநிலையத்துறைக்கு மனு அனுப்பியும், பரிசீலிக்கவில்லை’’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இவரது கோரிக்கையை பரிசீலிக்க கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், தன் கோரிக்கையை பரிசீலிக்கவில்லை என்று கூறி, அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கை ஜெபமணி மோகன்ராஜ் தொடர்ந்தார்.

மெத்தனபோக்கு

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் பி.டி.பெருமாள் ஆஜராகி, ‘‘இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் மெத்தனபோக்குடன் செயல்படுகின்றனர். நிலத்தை மீட்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் செய்த விண்ணப்பதுக்கு பதில் அளித்த அறநிலையத்துறை, இந்த கோவிலுக்கு 340 கிரவுண்ட் நிலம் உள்ளது என்று பதிலளித்துள்ளது. ஆனால், இந்த வழக்கில் 200 கிரவுண்ட் நிலம் தான் உள்ளது என்று பதில் மனுவில் கூறியுள்ளது. இதில் முன்னுக்குப்பின் முரணான தகவலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த முறைகேட்டில், அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளனர். பல கோடி ரூபாய் கோவில் சொத்து பலரால் அபகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் அல்லாமல், பிறதுறை அதிகாரிகளை கொண்ட விசாரணை குழுவை அமைக்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை

இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்து சமய அறநிலையத்துறையின் முக்கிய பணியே கோவிலையும், கோவில் சொத்துகளையும் பாதுகாத்து, பராமரிப்பது தான். அதற்காகத்தான் இந்த துறையே உருவாக்கப்பட்டது. அந்த பணியை கூட அதிகாரிகள் செய்யவில்லை. அதிகாரிகள் அஜாக்கிரதையாக செயல்படுகின்றனர்" என்று கடும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர், ‘‘அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 140 கிரவுண்ட் நிலம் என்ன ஆனது? அவற்றை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன?’’ என்று அரசு தரப்பு வக்கீலிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

‘‘இந்த விவகாரத்தில், அறநிலையத்துறை அதிகாரிகள் எப்படி செயல்படுகிறார்கள்? என்பதை பார்ப்போம். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறோம். சரியான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், விசாரணை குழுவை அமைத்து உத்தரவிடுவோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும்’’ என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

நிலம் எவ்வளவு?

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைத்த நீதிபதிகள், ‘‘கோவிலுக்கு சொந்தமான நிலம் எவ்வளவு? ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் எவ்வளவு? மீட்கப்பட்ட நிலம் எவ்வளவு? என்பது குறித்த விரிவான அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

Next Story