சேறும், சகதியும் ஆன சாலையால் போக்குவரத்து நெரிசல்


சேறும், சகதியும் ஆன சாலையால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 16 July 2021 7:59 PM GMT (Updated: 16 July 2021 7:59 PM GMT)

ராஜபாளையத்தில் சேறும், சகதியும் ஆன சாலையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ராஜபாளையம், 
ராஜபாளையத்தில் சங்கரன்கோவில் முக்கிலிருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்டு ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டன. இந்த சாலைக்கு மாற்றுப்பாதை இல்லாததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து  பாதாள சாக்கடை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உடனடியாக புதிய சாலை போடப்பட்டது. பொது போக்குவரத்திற்கு முடக்கம் செய்யப்பட்ட போது பாதாள சாக்கடை பணிக்கு சாலையை தோண்ட வில்லை. ஆனால் தற்போது பஸ் போக்குவரத்து தொடங்கிய உடன் சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. இந்தநிலையில் நேற்று அதிகாலை முதல் ராஜபாளையத்தில் சாரல் மழை பெய்தது. இந்த மழையால் புதிய பஸ்நிலையம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் ெவறும் மண்ணை மட்டும் போட்டு மூடியிருந்ததால் அந்த சாலை மழையினால் சேறும், சகதியுமாக மாறி காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பயணிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மாற்றுப்பாதை இல்லாததால் போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை சரி செய்ய முடியாமல் திணறினர். எனவே பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து தரமான சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story