ஜாமீனில் வெளியே வந்த ரவுடி வெட்டிக்கொலை காப்பாற்ற முயன்ற நண்பருக்கும் அரிவாள் வெட்டு


ஜாமீனில் வெளியே வந்த ரவுடி வெட்டிக்கொலை காப்பாற்ற முயன்ற நண்பருக்கும் அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 17 July 2021 6:10 AM GMT (Updated: 17 July 2021 6:10 AM GMT)

சென்னையில் ஜாமீனில் வெளியே வந்த ரவுடி, முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற நண்பருக்கும் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது.

சென்னை, 

சென்னை திருவல்லிக்கேணி நீலம் பாஷா தர்கா பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேஷ் என்ற கிளி ராஜேஷ் மற்றும் ஜான்சன். ரவுடிகளான இவர்கள் உள்பட 9 பேர் கடந்த மாதம் 20-ந்தேதி நடுக்குப்பம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மெரினா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் ராஜேஷ், ஜான்சன் ஆகிய 2 பேரும் கடந்த 8-ந்தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர்.

இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில் மெரினா போலீஸ் நிலையத்தில் 2 பேரும் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர். நேற்று காலையில் வழக்கம்போல் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு ராஜேஷ், ஜான்சன் இருவரும் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தனர்.

மெரினா விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள டாக்டர் பெசன்ட் சாலை பூங்கா அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் 2 பேரையும் திடீரென்று வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் 2 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. உயிர் தப்பிக்க 2 பேரும் ஓடினார்.

ஆனாலும் அந்த கும்பல் விடாமல் அவர்களை விரட்டிச்சென்று வெட்டியது. இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜான்சன் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த ரவுடி ஏழுமலைக்கும், ராஜேசுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மேலும் ஏழுமலை மனைவிக்கும் ராஜேசுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.

எனவே ஏழுமலை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ராஜேசை கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. ராஜேசை காப்பாற்ற முயன்றதால் ஜான்சனையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டி உள்ளது. இந்த வழக்கில், ஏழுமலை மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story