ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தீப்பிடித்தது வாலிபர் உடல் கருகி பலியான பரிதாபம்


ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தீப்பிடித்தது வாலிபர் உடல் கருகி பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 17 July 2021 6:01 PM GMT (Updated: 17 July 2021 6:01 PM GMT)

ராசிபுரம் அருகே நேற்று அதிகாலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்துக்கு உள்ளானதில் லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற வாலிபர் தீயில் உடல் கருகி பலியானார்.

ராசிபுரம்:

லாரி தீப்பற்றி எரிந்தது
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 32), லாரி டிரைவர். இவர் தஞ்சாவூரை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் லாரியில் பட்டுக்கோட்டை அடுத்த பேராவூரணியில் நேற்று முன்தினம் மாலை கயிறு லோடு ஏற்றினார். 
பின்னர் இரவு 8 மணி அளவில் அங்கிருந்து சேலத்திற்கு லாரி புறப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணியளவில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர் கேட் மேம்பாலத்தில் லாரி சென்றது.
அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது லாரி மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற வாலிபர் சிலம்பரசன் (21) என்பவர், லாரி முன்சக்கரத்தின் அடியில் சிக்கி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் லாரியில் தீப்பிடித்தது. மேலும் லாரியில் இருந்த கயிறு லோடில் தீ மளமளவென பரவியதோடு, மோட்டார் சைக்கிளை ஓட்டிச சென்ற வாலிபர் மீதும் தீப்பற்றி எரிந்தது.
வாலிபர் பலி
இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற வாலிபர் சிலம்பரசன் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தீயில் கருகி இறந்தார். தகவல் அறிந்த ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
லாரியில் இருந்த கயிறு கட்டுகளை கீழே தள்ளிவிட்டு தீயை அணைத்தனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை போராடி அணைத்தனர். இதனிடையே இறந்த சிலம்பரசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
டிரைவர் கைது
இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற சிலம்பரசன் திண்டுக்கல் மாவட்டம், கொடைரோட்டில் அவரது அண்ணன் சதீஷ்குமார் வைத்துள்ள பேக்கரி கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்துக்கொண்டு அவரது அண்ணனுக்கு உதவியாக இருந்தது தெரியவந்தது. மேலும் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு கொடைரோட்டில் இருந்து புறப்பட்டு சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக தனது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம், மல்லப்பள்ளி அருகே உள்ள ஏரியூரூக்கு சென்றபோது விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்ததும் தெரிந்தது. 
விபத்து குறித்து ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் காளிமுத்துவை கைது செய்தார்.

Next Story