கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு; கர்நாடகத்தில் இன்று முதல் தியேட்டர்கள் திறப்பு


கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு; கர்நாடகத்தில் இன்று முதல் தியேட்டர்கள் திறப்பு
x
தினத்தந்தி 18 July 2021 9:10 PM GMT (Updated: 18 July 2021 9:10 PM GMT)

கர்நாடகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கொரோனா ஊரடங்கு மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே வேளையில் தியேட்டர்கள்-கல்லூரிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 பெங்களூரு:
  
கொரோனா 2-வது அலை

  கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2-வது அலை ஏற்பட்டது. இதனால் ஒரு நாள் பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. ஊரடங்கு மற்றும் கடும் நடவடிக்கைகளால் தற்போது கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்துவிட்டது. தற்போது தினசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் வந்துள்ளது. 

இறப்புகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. அதனால் கடந்த ஜூன் மாதம் முதல் முறையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதைத்தொடர்ந்து கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. பஸ் போக்குவரத்து, வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உள்பட பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டன.

எடியூரப்பா ஆலோசனை

  அதே நேரத்தில் உயர்கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவை செயல்பட அனுமதி அளிக்கப்படவில்லை. ஏற்கனவே 3 கட்ட தளர்வுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

  இந்த நிலையில் கர்நாடகத்தில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரிகள், அதிகாரிகளுடன் பெங்களூருவில் உள்ள தனது காவேரி இல்லத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், வனத்துறை மந்திரி அரவிந்த் லிம்பாவளி, தலைமை செயலாளர் ரவிக்குமார் உள்பட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

  இந்த கூட்டத்தில் என்னென்ன சேவைகளுக்கு அனுமதி அளிப்பது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை வருகிற ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி வரை நீட்டிப்பது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

  இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் 4-வது கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-

தியேட்டர்கள் திறக்க அனுமதி

  கர்நாடகத்தில் தற்போது இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணிக்கு தொடங்குகிறது. இது இனி இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும். சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள், நாடக அரங்கங்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

  ஆனால் இதில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அத்துடன் கொரோான பரவல் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

26-ந்தேதி முதல் கல்லூரிகள்...

  உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கல்லூரிகள் வருகிற 26-ந் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி ஆவது போட்டிருக்க வேண்டும். அத்தகையவர்கள் மட்டுமே கல்லூரிகளில் கலந்துகொள்ள வேண்டும்.

  கல்லூரிகளில் கெரோனா விதிமுறைகளை தவறாமல் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் கல்லூரிக்கு ஆஜராவது கட்டாயம் அல்ல. அது மாணவர்களின் விருப்பம். அதே போல் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் இதிலும் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும்.
  இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.

Next Story