காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு


காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 19 July 2021 12:00 AM GMT (Updated: 19 July 2021 12:00 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக மாற்ற உதவும் நோக்கத்தின் அடிப்படையில் "புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்" என்ற திட்டமானது, முதல்-அமைச்சரால் 2012-13-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தை காஞ்சீபுரம் மாவட்டத்தில் செயல்படுத்த தொழில் தொடங்குவோருக்கு தமிழக அரசு மானியம் ஒதுக்கீடு செய்து இலக்கு நிர்ணயித்துள்ளது.

மானியம் வழங்கப்படும்

இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத மானியம் அல்லது அதிக பட்சமாக ரூ.50 லட்சம் மானியம் வழங்கப்படும். மேலும் வங்கிகள் கொடுக்கும் கடனுக்கான வட்டியில் 3 சதவீத மானிய உதவியும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் தொழில் முனைவோரின் தொழில் திட்டத்தொகை குறைந்தபட்சம் 10 லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும். அதிக பட்சம் கடன் தொகை வரம்பு வரையறுக்கப்படவில்லை. இந்த திட்டத்தின் மூலம் கடன் பெற விரும்புவோர் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். கல்வி தகுதி பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழில் நுட்ப பயிற்சி (ஐ.டி.ஐ), தொழில் பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொது பிரிவினருக்கான வயது 35-க்குள் இருக்க வேண்டும். பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் வயது 45-க்குள் இருக்க வேண்டும். ஆஸ்பத்திரிகள், பிசியோதரபி மையங்கள், மருத்துவ ஆய்வகங்கள், கட்டுமான உதவி பொருட்கள் வாடகைக்கு விடுதல் மற்றும் நிலம் அகழ்வி (எர்த் மூவர்ஸ்) வாடகைக்கு விடுதல் ஆகிய சேவை சார்ந்த தொழில்களுக்கு மானியத்துடன் கடனுதவி அளிக்கப்படுவது. இந்த திட்டத்தின் சிறப்பம்சம் ஆகும்.

தொழில் முனைவோர் பயிற்சி

இந்த திட்டத்தில் கடனுதவி பெறும் நபர்களுக்கு 15 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி கொரோனா தொற்றை முன்னிட்டு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 50 சதவீதம் பெண் தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகுதிகள் உடைய தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கவும்.

மேலும் விவரங்களை பெற காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரில் அணுகி அல்லது 27238837, 23276686. 27238551 என்ற தொலைபேசி மூலமாக அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story