மரக்கடை அதிபர் வீட்டில் புகுந்து ரூ.14½ லட்சம் தங்க நகைகள் திருட்டு


மரக்கடை அதிபர் வீட்டில் புகுந்து ரூ.14½ லட்சம் தங்க நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 20 July 2021 7:57 PM GMT (Updated: 20 July 2021 7:57 PM GMT)

மண்டியாவில் மரக்கடை அதிபர் வீட்டில் புகுந்து ரூ.14½ லட்சம் தங்க நகைகள், 1½ கிலோ வெள்ளியை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

ஹலகூர்: மண்டியாவில் மரக்கட்டை அதிபர் வீட்டில் புகுந்து ரூ.14½ லட்சம் தங்க நகைகள், 1½ கிலோ வெள்ளியை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். 
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

மரக்கடை அதிபர்

மண்டியா மாவட்டம் மலவள்ளியை சேர்ந்தவர் குமார். மரக்கட்டை அதிபர். இவருடைய மனைவி மஞ்சுளா. இந்த நிலையில் இவர்கள் கடந்த 18-ந்தேதி தங்கள் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மைசூருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள், குமாரின் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். 
பின்னர் அவர்கள் வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த தங்கம், வெள்ளி, ரொக்கப்பணத்தை திருடிவிட்டு தப்பியோடிவிட்டனர். இந்த நிலையில் நேற்று காலை குமார் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

320 கிராம் தங்கம்

பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த ரூ.14½ லட்சம் மதிப்பிலான 320 கிராம் தங்கம், 1½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.2½ லட்சம் ரொக்கம் ஆகியவை மாயமாகி இருந்தது. இதனால், யாேரா மர்மநபர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மலவள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். 

பின்னர் சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. ஆனல் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். 

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்ததும், மண்டியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வினி, துணை போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி நாராயண பிரசாத் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் குமார் மற்றும் மஞ்சுளா, அந்தப்பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் அங்கு கண்காணிப்பு கேமரா எதுவும் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். 

இதுகுறித்து மலவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story