ஆலங்குளத்தில் உரிமையியல் நீதிமன்றம் அமைப்பதற்கான இடம் தேர்வு; மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்


ஆலங்குளத்தில் உரிமையியல் நீதிமன்றம் அமைப்பதற்கான இடம் தேர்வு; மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்
x
தினத்தந்தி 20 July 2021 8:08 PM GMT (Updated: 20 July 2021 8:08 PM GMT)

ஆலங்குளத்தில் உரிமையியல் நீதிமன்றம் அமைப்பதற்கான இடத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

ஆலங்குளம்:
ஆலங்குளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் உளவியல் நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகின்றது. அதனை தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு உரிமையியல் நீதிமன்றம் அமைக்க அரசாணை வெளியிட்டது. அதன் பேரில் ஆலங்குளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக பல்வேறு தனியார் இடங்களை நீதிமன்றம் அமைப்பதற்கு ஆய்வு செய்து வந்தனர். இந்நிலையில் அம்பை சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலக கட்டிடத்தில் உரிமையியல் நீதிமன்றம் அமைப்பதற்கு போதிய இட வசதி இருப்பது தெரியவந்தது. இதுசம்மந்தமாக ஆலங்குளம் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியனிடம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டது. அதன்பேரில் அம்பை சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். கட்டிடத்தை நேற்று மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். பின்னர் உரிமையியல் நீதிமன்றம் அமைக்க போதிய இடவசதி இருப்பதாகவும், அதற்கான முயற்சி எடுப்பதாகவும் உறுதியளித்தார். ஆய்வின்போது பி.எஸ்.என்.எல். இளநிலை பொறியாளர் கல்பனா, மாவட்ட நிர்வாகிகள் ராதா, கணபதி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story