மத்திய ஜல்சக்தித்துறை மந்தரியுடன் சுமலதா எம்.பி. சந்திப்பு


மத்திய ஜல்சக்தித்துறை மந்தரியுடன் சுமலதா எம்.பி. சந்திப்பு
x
தினத்தந்தி 20 July 2021 8:44 PM GMT (Updated: 20 July 2021 8:44 PM GMT)

மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை சுமலதா எம்.பி. சந்தித்து பேசினார். அப்போது அவா், கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் உள்ள சட்டவிரோத கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு: மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை சுமலதா எம்.பி. சந்தித்து பேசினார். அப்போது அவா், கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் உள்ள சட்டவிரோத கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அணைக்கு பிரச்சினை

மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை டெல்லியில் நேற்று மண்டியா தொகுதி மக்களவை உறுப்பினர் சுமலதா நேரில் சந்தித்து பேசினார். அப்போது கே.ஆர்.எஸ். அணை சுற்று பகுதியில் நடைபெறும் சட்டவிரோத கல் குவாரி தொழில்கள் குறித்து ஒரு கடிதத்தை அவர் வழங்கினார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

எனது தொகுதியான மண்டியாவில் கே.ஆர்.எஸ். அணை உள்ளது. இந்த அணை கர்நாடகம், தமிழ்நாட்டை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. ஆனால் அந்த அணைக்கு சேதம் விளைவிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த அணையின் 20 கிலோ மீட்டர் சுற்று பகுதியில் கல் குவாரிகள் நடத்துவோர், வெடிகளை பயன்படுத்துவதால் அணைக்கு பிரச்சினை ஏற்படும் என்று சுப்ரீம் கோர்ட்டே கூறியுள்ளது.

குடிநீர்-காற்று மாசு

அதன் பிறகும் அந்த அணை பகுதியில் சட்டவிரோதமாக கல் குவாரிகள் அதிக சத்தம் எழுப்பும் வெடியை பயன்படுத்துவதாக எனக்கு புகார் வந்தது. இதையடுத்து நான் அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன். அந்த பகுதியில் சட்டவிரோத கல் குவாரி தொழில்கள் அதிகளவில் நடக்கிறது என்பதை அறிந்தேன். அது அணையின் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமைந்துள்ளது.

சட்டவிரோத கல் குவாரி தொழில்களால் காற்று மற்றும் நீர் மாசு அடைந்துள்ளது. அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை மீதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கால்நடைகள், அருகில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கால்நடை தீவன பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரில் கலப்படம் ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனால் கே.ஆர்.எஸ். அணை பகுதியில் நடைபெறும் சட்டவிரோத கல் குவாரி தொழில்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Next Story