கார்-டேங்கர் லாரி மோதல்: 4 வாலிபர்கள் உடல் நசுங்கி சாவு


கார்-டேங்கர் லாரி மோதல்: 4 வாலிபர்கள் உடல் நசுங்கி சாவு
x
தினத்தந்தி 20 July 2021 8:58 PM GMT (Updated: 20 July 2021 8:58 PM GMT)

கலபுரகி அருகே காரும், டேங்கர் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 4 வாலிபர்கள் உடல் நசுங்கி இறந்தனர்.

கலபுரகி: கலபுரகி அருகே காரும், டேங்கர் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 4 வாலிபர்கள் உடல் நசுங்கி இறந்தனர்.

4 பேர் சாவு

கலபுரகி அருகே கோட்டனூர் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த டேங்கர் லாரியும், காரும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் கார் முற்றிலும் உருக்குலைந்தது. விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் கலபுரகி டவுன் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் காருக்குள் இருந்தவர்களை மீட்க போலீசார் முயன்றனர். அப்போது காரின் இடிபாடுகளில் சிக்கி 4 வாலிபர்கள் இறந்தது தெரியவந்தது. மேலும் 2 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின்னர் உயிரிழந்த 4 வாலிபர்களின் உடல்களையும் மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

இதன்பின்னர் உயிரிழந்தவர்கள் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது இறந்தவர்கள் ஜேவர்கியை சேர்ந்த ராகுல் (வயது 25), காசிம் (26), உல்லாஸ் (26) என்பது தெரிந்தது. இன்னொருவரின் பெயரும், விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரின் பெயர்களும் உடனடியாக தெரியவில்லை.

நண்பர்களான 6 பேரும் காரில் ஜேவர்கியில் இருந்து கலபுரகிக்கு வந்து கொண்டு இருந்ததும், அப்போது கார் விபத்தில் சிக்கி 4 பேர் இறந்ததும் தெரியவந்தது. இந்த விபத்து குறித்து கலபுரகி டவுன் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் லாரி டிரைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. விபத்தில் நண்பர்கள் 4 பேர் இறந்த சம்பவம் கலபுரகியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story