மர்ம நோய் தாக்கி ஆடு, மாடுகள் சாவு


மர்ம நோய் தாக்கி ஆடு, மாடுகள் சாவு
x
தினத்தந்தி 20 July 2021 9:20 PM GMT (Updated: 20 July 2021 9:22 PM GMT)

மானாமதுரை அருகே மர்மநோய் தாக்கி ஆடு, மாடுகள் செத்தன. இதனால் அந்த பகுதியில் கால்நடை மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மானாமதுரை,

மானாமதுரை அருகே மர்மநோய் தாக்கி ஆடு, மாடுகள் செத்தன. இதனால் அந்த பகுதியில் கால்நடை மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஆடு, மாடுகள் சாவு

மானாமதுரை அருகே கரிசல்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட வன்னிக்குடி கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளில் ஆடு, மாடு உள்ளிட்டவைகளை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இந்த பகுதியில் உள்ள ஆடு, மாடுகளை ஏதோ ஒரு மர்ம நோய் தாக்கி வருகிறது.
இதனால் அவைகள் சரிவர தீவனம் தின்பதில்லை. அதோடு சில நாட்களில் இறந்தும் போய் விடுகின்றன. இந்த கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரது வீட்டில் நின்ற 2 ஆடுகள் திடீரென ஒன்றன்பின் ஒன்றாக மர்ம முறையில் செத்து விழுந்தன. இதேபோல் இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களின் மாடு, கன்றுக்குட்டியும் திடீரென செத்தன.

மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை

இதை பார்த்து கால்நடை வளர்ப்போர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஏதோ மர்ம நோய் தாக்கி தான் ஆடு, மாடுகள் இறந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர். அதோடு தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளுக்கும் மர்ம நோய் தாக்கி விட்டதோ என்று பீதி அடைந்து உள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, கடந்த சில நாட்களாக எங்கள் கிராமத்தில் ஆடு, மாடுகள் மர்ம நோய் தாக்கியதில் செத்து விழுந்தன. எந்த நோய் தாக்கியது என தெரியவில்லை. கால்நடைகளை மர்ம நோய் தாக்கியதால் நாங்கள் பெரிதும் பீதி அடைந்து உள்ளோம். எனவே மாவட்ட கால்நடைத்துறையினர் எங்கள் பகுதியில் சிறப்பு முகாம் நடத்தி, கால்நடைகளை பரிசோதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றனர்.

Next Story