ஓய்வறையில் பொது நோயாளிகள் தங்கும் அவலநிலை


ஓய்வறையில் பொது நோயாளிகள் தங்கும் அவலநிலை
x
தினத்தந்தி 21 July 2021 12:48 PM GMT (Updated: 21 July 2021 12:48 PM GMT)

திருப்பூர் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காமல் ஓய்வறையில் பொது நோயாளிகள் தங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காமல் ஓய்வறையில் பொது நோயாளிகள் தங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
படுக்கை வசதி
திருப்பூரில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சை வருவது வழக்கம். இதனால் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த மருத்துவ மனையில் ஆக்சிஜன் வசதி இருப்பதால் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்கள் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெற குவிந்தனர். இதனால் கொரோனா படுக்கைகள் தட்டுப்பாடும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்டது. இதனால் அரசு மருத்துவமனையில் கூடுதலாக கொரோனா படுக்கைகள் வசதி ஏற்படுத்தப்பட்டது.
இதனால் பொது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது குறைக்கப்பட்டது. அதன்படி அந்த வார்டுகளும் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டன. இதற்கிடையே மாற்றப்பட்ட வார்டுகளில் பொது நோய்களுக்கு சிகிச்சை பெற்ற மற்றும் ஆபரேசன் செய்த பலரும் வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் உறவினர்கள் இல்லாத பலரும் படுக்கை கிடைக்காததால் மருத்துவமனை வளாகத்தில் உள்ள நேயாளிகளுடன் வருகிற உறவினர்களுடன் தங்கும் ஓய்வறையில் தங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நோயாளிகள் கூறியதாவது
காலில் ஆபரேசன் செய்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தோம். கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காலகட்டத்தில் கொரோனா வார்டுகளாக பல வார்டுகள் மாற்றப்பட்டன. இதனால் எங்களை வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் எங்களுக்கு உறவினர்கள் கிடையாது. தற்போது கொரோனா தொற்று குறைந்த நிலையிலும், மீண்டும் பொது வார்டுகளில் எங்களை சிகிச்சை பெற இன்னமும் அழைக்காமல் இருக்கிறார்கள்.
நாங்களும் படுக்கை வசதி கிடைக்காமல் இருப்பதால் ஓய்வறையில் தங்கி வருகிறோம். எனவே எங்களை மீண்டும் படுக்கை வசதி கொடுத்து, அரசு மருத்துவனை நிர்வாகம் சிகிச்சை கொடுக்க நடவடிக்கை வேண்டும். ஏற்கனவே உறவினர்கள் இன்றி நாங்கள் இருக்கும் நிலையில் இதுபோன்ற நிலை மேலும் எங்களை கவலையடைய செய்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story