விருத்தாசலம் பகுதியில் பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு மரக்கன்றுகள்


விருத்தாசலம் பகுதியில் பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு மரக்கன்றுகள்
x
தினத்தந்தி 21 July 2021 2:17 PM GMT (Updated: 21 July 2021 2:17 PM GMT)

விருத்தாசலம் பகுதியில் பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு மரக்கன்றுகள் தமிழகத்திலேயே முதல் முறையாக வழங்கப்படுகிறது.

விருத்தாசலம், 

தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் வீட்டுமனை மற்றும் நிலம் பத்திரப்பதிவு செய்யும் அனைவருக்கும் அந்தந்தப்பகுதி சார் பதிவாளர்கள் எழுந்து நின்று மரியாதை செய்து அனுப்ப வேண்டும். இது அவர்களுக்கு புதுவித அனுபவமாக இருக்கும் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி விருத்தாசலம் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) ரூபியா பேகம் உத்தரவுப்படி விருத்தாசலம், தொழுதூர், ஸ்ரீமுஷ்ணம், கம்மாபுரம், உளுந்தூர்பேட்டை, மங்கலம்பேட்டை, பெண்ணாடம், திட்டக்குடி, சிறுபாக்கம், நல்லூர் உள்ளிட்ட 11 பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் நேற்று முதல் மனை மற்றும் நிலங்கள் பத்திரப்பதிவு செய்யும் நபர்களுக்கு மரியாதை செய்ததுடன், தமிழகத்திலேயே முதன்முறையாக அவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட பதிவாளர் ரூபியாபேகம் கூறுகையில்,

வீட்டுமனை அல்லது நிலங்கள் வாங்கி அதனை பத்திரப்பதிவு செய்ய வரும்போது, அவர்களிடம் மரக்கன்றுகள் கொடுத்தால், அதனை அவர்கள் வாங்கிய இடங்களில் நட்டு பராமரிக்க வாய்ப்பு உண்டு. தமிழகத்திலேயே முதல்முறையாக பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு விருத்தாசலம் பகுதி சார் பதிவாளர் அலுவலகங்களில் தான் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு செய்ய வருபவர்களுக்கு எழுந்து நின்று பத்திரங்களை வழங்குவதுடன், மரக்கன்றுகளை கொடுப்பதும் பொதுமக்களுக்கு ஒரு புதுவித அனுபவமாக இருக்கும் என்றார்.

Next Story