தோட்டத்தில் வெடி வெடித்து தொழிலாளி பலி


தோட்டத்தில் வெடி வெடித்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 21 July 2021 3:11 PM GMT (Updated: 21 July 2021 3:11 PM GMT)

ஒட்டன்சத்திரம் அருகே தோட்டத்தில் வெடி வெடித்ததில் தொழிலாளி ஒருவர் பலியாகினார். மற்றொரு தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

ஒட்டன்சத்திரம் :

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஜவ்வாதுபட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி. விவசாயி. இவர் தனது தோட்டத்தில் இருந்த கல் குட்டைகளை வெடி வைத்து அகற்ற முடிவு செய்தார். 

இதையடுத்து அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் நந்தகிரி (வயது 21), சூர்யா (22) ஆகிய 2 பேரும் வெடி வைத்து பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது சில வெடிகள் வெடிக்காத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையறியாமல் அவர்கள் 2 பேரும் அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது திடீரென்று ஒரு வெடி வெடித்தது. 

இதில் படுகாயமடைந்த நந்தகிரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த சூர்யாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 


அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இடையகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story