காதல் திருமணமான 8 மாதத்தில் சர்வேயர் தூக்குப்போட்டு தற்கொலை


காதல் திருமணமான 8 மாதத்தில் சர்வேயர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 July 2021 3:32 PM GMT (Updated: 21 July 2021 3:32 PM GMT)

ஜோலார்பேட்டை அருகே காதல் திருமணமான 8 மாதத்தில் சர்வேயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜோலார்பேட்டை

காதல் திருமணம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன். இவருடைய மகன் திலீபன் (வயது33). திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக வேலைபார்த்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகள் திவ்யா (27: என்பவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

பின்னர் 7 மாதங்களுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். டாக்டரான திவ்யா ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரி பகுதியில் உள்ள அம்மா மினி கிளினிக்கில் தற்காலிக டாக்டராக பணிபுரிந்து வருகிறார். 

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் ஆடிமாதம் பிறந்துவிட்டதால் கடந்த வெள்ளிக்கிழமை திவ்யாவை, அவருடய பெற்றோர் அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் திலீபனின் குடும்பத்தினர் திவ்யாவை அழைத்து வர கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டிற்கு உறவினர்களுடன் சென்றுள்ளனர். 

அப்போது திவ்யாவின் குடும்பத்தினருக்கும், திலீபனின் குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த திலீபன் நேற்று மாலை அவரது வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைக்கண்ட இவரது குடும்பத்தினர் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணை

 தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற சப்- இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் திலீபன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து திலீபனின் தாயார் தமிழ்தேவி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
மேலும் திருமணமான 8 மாதத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



Next Story