ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி


ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி
x
தினத்தந்தி 21 July 2021 7:52 PM GMT (Updated: 21 July 2021 7:52 PM GMT)

ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையம் முன் குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


ஸ்ரீரங்கம்,
ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையம் முன் குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயி

திருவானைக்காவல் நடுக்கொண்டையம்பேட்டையை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 68). விவசாயி. இவருக்கு நடுக்கொண்டையம் பேட்டை உள் பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அதே பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (65) கூலித்தொழிலாளி. இவரது வீட்டுக்கு செல்லும் வழியில் 10 அடிக்கான நிலம் ரவிசங்கரின் ஒரு ஏக்கர் நிலத்தில் உள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் மின் கம்பம் நடமுடியாததால் 36 ஆண்டுகளாக மின் வசதி இல்லாமல் சீனிவாசன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் சீனிவாசன் தனக்கு சொந்தமான 10 அடி இடத்தில் பொதுப்பாதை தர வேண்டும் எனக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து சீனிவாசனுக்கு பொதுப்பாதைக்கான 10 அடி இடத்தில் சென்று வர பாதை அமைக்கவும், அந்த பகுதியில் மின்கம்பம் நட்டு உடனடியாக மின் இணைப்பு வழங்க மின்வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மின்வாரிய அதிகாரிகள் அந்த பகுதியில் மின் கம்பம் நடும் பணியில் ஈடுபட்டனர். 

தீக்குளிக்க முயற்சி

இந்தநிலையில் ரவிசங்கர் தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 12 பேருடன் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்துக்கு சென்று தங்கள் பகுதியில் மின்கம்பம் நடக்கூடாது எனக்கூறி திடீரென அனைவரும் உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு போலீஸ் நிலையம் முன் தீக்குளிக்க முயன்றனர். உடனே அங்கிருந்த போலீசார் அனைவரும் மீதும் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். 

மேலும் ரவிசங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story