வாணியம்பாடி அருகே உருவாகும் நீர்வீழ்ச்சிகள்


வாணியம்பாடி அருகே உருவாகும் நீர்வீழ்ச்சிகள்
x
தினத்தந்தி 21 July 2021 10:56 PM GMT (Updated: 21 July 2021 11:20 PM GMT)

வாணியம்பாடி அருகே புதிது புதிதாக நீர்வீழ்ச்சி உருவாகி உள்ளது.

வாணியம்பாடி,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கவுண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம், காப்புக்காடுகள் உள்ளது. இந்தக் காப்புக்காடுகளில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஓடைகள், கானாறுகள், சிற்றருவிகளில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 

அதேபோல் ராமகுப்பம் மண்டலம் தேவராஜபுரத்துக்கு தெற்கே ஆந்திராவின் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி என்னும் பொம்மகெடா நீர்வீழ்ச்சி புதிதாக உருவாகி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் 40 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது. இந்த நீர்வீழ்ச்சி வாணியம்பாடியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு, கடந்த ஒரு மாதமாக தண்ணீர் கொட்டுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

இந்த நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடக ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், இளைஞர்கள், பெண்கள், சிறுவர் சிறுமிகள் வருகின்றனர். விடுமுறை நாட்கள் மட்டுமின்றி வார நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். 

பொம்மகெடா நீர்வீழ்ச்சி உள்ள மலையின் கிழக்கே திம்மகெடா நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியிலும் குளிக்க சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள வாணியம்பாடி அருகே தொடர்ந்து புதிது புதிதாக நீர்வீழ்ச்சி உருவாகி வருவது சுற்றுலா பயணிகளுக்கும், இளைஞர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story