பாலாற்று பகுதியை ஒட்டியுள்ள ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவு


பாலாற்று பகுதியை ஒட்டியுள்ள ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 21 July 2021 10:56 PM GMT (Updated: 21 July 2021 11:22 PM GMT)

திருப்பத்தூர் மாவட்டத்தில் பாலாற்று பகுதியை ஒட்டியுள்ள ஏரிகளுக்கு தடையின்றி தண்ணீர் செல்ல கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டம் உதயேந்திரம் பகுதியில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் உள்ள உதயேந்திரம் பெரிய ஏரியை கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டார். 
அப்போது ஏரியின் பரப்பளவு, ஏரி முழுவதுமாக பரவியுள்ள கருவேல மரங்களை அகற்றுதல் குறித்தும், ஏரியினை டிரோன் மூலம் வரைபடம் தயாரிக்கவும் அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.

பின்னர் ஏரிக்கு பாலாற்றில் இருந்து தண்ணீர் வரும் கால்வாய் புதர் மண்டியும், ஆக்கிரமிப்புகளால் அடைபட்டு உள்ளதையும் பார்த்து சுமார் 3 கிலோமீட்டர் கால்வாயை தூர்வாரி சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து மேட்டுபாளையம் கிராமத்தில் பாலாறு -உதயேந்திரம் கால்வாயை பார்வைிட்டு கால்வாயை தூர்வாரவும், கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை கண்கெடுத்து மாற்று இடம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர் மற்றும் தாசில்தாருக்கு உத்திரவிட்டார்.

பின்னர் ஜாப்ராபாத்தில் பாலாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து உதயேந்திரம் ஏரிக்கு செல்லும் கால்வாயை பார்வையிட்டு கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், கால்வாயை தூர்வாரவும் உத்தரவிட்ட அவர் நிரந்தமாக தடுப்பணையிலிருந்து தண்ணீர் எவ்வித தடையுமின்றி ஏரிக்கு செல்ல திட்ட அறிக்கையினை தயார் செய்து அரசுக்கு அனுப்பவும்,  இப்பணிகளை வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக முடிக்கவும் உத்தரவிட்டார்.

மேலும் பள்ளிப்பட்டு ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்லும் கால்வாய் புதர்மண்டியுள்ளதை சீரமைக்க பொதுப்பணித்துறை பொறியாளருக்கு உத்திரவிட்டார்.

Next Story